புறக்கோட்டையில் தீ! 50 கடைகள் எரிந்து சாம்பராகின! பலகோடி ரூபா சொத்துக்கள் நாசம்!
கொழும்பு - புறக்கோட்டை போதிராஜ மாவத்தையின் அரச மரத்தடிக்கு அருகில் அமையப்பெற்றுள்ள விகாரைக்கு பின்புறமாக அமைந்திருந்த (அங்காடி) பல்பொருள் விற்பனை சந்தைக் கடைத் தொகுதி நேற்று வெள்ளிக்கிழமை மாலை முற்றாக எரிந்து சாம்பரானது.
சுமார் 8 மணியளவில் கடையொன்றில் தீ பரவியதையடுத்து விற்பனைத் தொகுதியின் 50க்கும் மேற்பட்ட கடைகள் சுவாலை விட்டு எரிந்து சாம்பராகியுள்ளன.
சம்பவத்தை அடுத்து புறக்கோட்டைப் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்த அதேவேளை, அப்பகுதியில் பெரும் அல்லோல கல்லோலம் ஏற்பட்டது.
பொது மக்கள் பதற்றத்தால் அங்குமிங்கும் சிதறியோடிய அதேவேளை, கடைகளை தமது விற்பனைப் பொருட்களுடன் தீ விபத்துக்கு பலி கொடுத்த வாடகை உரிமையாளர்கள் கதறி அழுது புரண்டதையும் அதிர்ச்சியடைந்த நிலையில் செய்வதறியாது நின்றிருந்ததையும் தீயை அணைப்பதற்கு அங்கு மிங்கும் ஓடியதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தீ பரவலுக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில் பல இலட்ச ரூபா பெறுமதியான உடமைகள் முற்றாக சாம்பராகியுள்ளன. தீ பரவியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினரும் விமானப் படையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இதன்போது அனைத்து கடைகளும் சொத்துக்களுடன் எரிந்து சாம்பராகியிருந்தன.
இரவு 8 மணியளவில் பரவிய தீயை சுமார் 1 1/2 மணித்தியாலங்கள் போராடி 9.30 மணியளவில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
சம்பவத்தில் போதிராஜ மாவத்தையில் புதிதாக சுயதொழில் முயற்சியாளர்களுக்கு என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கட்டப்பட்டு வழங்கப்பட்ட அங்காடி தொகுதிக்கு அருகில் காணப்பட்ட 50க்கும் மேற்பட்ட கடைகள் கொண்ட வாடகை அங்காடி தொகுதியே இவ்வாறு எரிந்து சாம்பரானது.
தீச்சம்பவத்தை அடுத்து பிரதேசத்தில் பெருந்தொகையான பொது மக்கள் ஒன்றுகூடிய நிலையில் தீயினை கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்துவதற்கும் என பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த பாதையூடாகவே இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்துக்கு பயணிகள் செல்லும் நிலையில் அப்பாதையானது போக்குவரத்திலிருந்து முற்றாக தடை செய்யப்பட்டது.
பைகள், துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் ,விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இருவட்டு விற்பனை நிலையங்கள் என்பன குறித்த பல்பொருள் அங்காடி தொகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
குறித்த அங்காடித் தொகுதியில் பைகள் விற்பனை செய்யும் கடையொன்றில் எரிந்து கொண்டிருந்த பெட்றோல்மாக்ஸ் விளக்கொன்றிலிருந்து பரவிய தீயே முழு கடைத் தொகுதியையும் எரித்ததாகவும் மற்றும் எண்ணெய் விளக்கொன்று சரிந்து விழுந்ததனாலேயே இந்த தீ ஏற்பட்டிருக்கலாமென்றும் இரு வேறுவிதமாக சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் உறுதியான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை.
தீயால் எரிந்து சாம்பரான கடைத் தொகுதியின் மத்திய பகுதியிலேயே முதலில் தீ பரவியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சேத விபரங்கள் மற்றும் தீ பரவலுக்கான உண்மையான காரணம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீ விபத்தில் கடை உரிமையாளர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
இதேவேளை தீ அணைப்பு பணிகளுக்கென கொழும்பு மாநகர சபையிலிருந்து 7 தீயணைப்பு பிரிவு வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.