புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2013

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி: இன்று மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு- மனித புதைகுழிகள் உச்ச கட்ட மனித உரிமை மீறல்: சி.பாஸ்க்கரா
திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் இன்று மனித எச்சங்களை தேடும் பணியின் போது மேலும் சில மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் இத்தேடுதல் பணிகள் நடைபெற்றது.
இதன்போது குறித்த பகுதியில் பாதையின் நடைபாதையின் ஒரு பகுதி அகற்றப்பட்டு அகழ்வு வேலைகள் நடைபெற்றன. மேலும் சில மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை, மனித எச்சங்களை தேடிக்கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறித்த மனித எச்சங்களை தேடும் பணிகளுக்கென அனுராதபுரம் சட்டவைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரெட்ண தலைமையில் சட்ட வைத்திய நிபுணர்கள் பகுப்பாய்விற்கென பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, பேராதனை பல்கலைக்கழக பகுப்பாய்வு அதிகாரி கே.நந்தசேன, தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஏ.விஜயரத்தின உள்ளிட்ட பல துறைசார் நிபுணபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாந்தை பகுதியில் மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் பாதையில் 50 மீற்றர் தூரத்தில் பாதையின் அருகே நீர் வடிகாலமைப்பிற்காக வேலைக்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
மேலும் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 10இற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
இன்றைய அகழ்வுப் பணிகளை பார்வையிட வன்னி மாவட்ட ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்கி ஆனந்தன் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்.
திருக்கேதீஸ்வர மனித புதைகுழிகள் இலங்கையின் உச்ச கட்ட மனித உரிமை மீறல் காட்டுத் தர்ப்பாரின் தக்க சான்று: சி. பாஸ்க்கரா
திருக்கேதீஸ்வரம் சமய குரவர் இருவரால் தேவாரம் பாடப்பட்டு இந்துக்களால் பழமை வாய்ந்த புனித தலமாக மதிக்கப்படும் இடமாகும். இத்தல வளாகத்தில் மனித புதைகுழி காணப்படுவது உலக வாழ் இந்துக்களின் மனதில் வெந்த புண்ணில் வேல்பாச்சும் செயலுக்கு ஒப்பானது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் வீடமைப்பு துறை தலைவருமான சி. பாஸ்க்கரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இனவாதம் தாண்டவம் ஆடுவது உலகறிந்த விடயமாகும். தற்போது மதவாதம் தலைவிரித்தாடுவதும் உலகம் அறிந்த விடயமேயாகும். குறுகிய காலத்தில் பல இந்து, கிறிஸ்தவ, பள்ளிகள் உடைக்கப்படுவதும், திருடப்படுவதும் யாவரும் அறிந்ததேயாகும். இதை வன்மையாக மன சாட்சியுள்ள மனிதர்களும்; உலக நாடுகளும் கண்டித்தமை நாமறிந்த விடயமாகும்.
இவ்வேளையில் எல்லாற்றையும் விஞ்சுவதாக அமைந்துள்ளது இனவெறியாட்டம். அதைவிட மேலாக மதவெறி நடவடிக்கையில் உச்சநிலையே திருக்கேதீஸ்வர வளாகத்தில் காணப்படும் மனித புதைகுழிகள் தக்க சான்றாக புலப்படுகின்றது. இப் பாதகச் செயலை எவர் எப்போ செய்திருப்பினும் மன்னிக்க முடியாத குற்றமும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட 1982ம் ஆண்டு தயாரித்து பாவனைக்கு விடப்பட்ட 25 சதம் முக்கிய ஒரே தடயமாக கருதப்படுகின்றது. அக்காலத்து சூழ்நிலையை நாம் கவனமாக நோக்கப்படுதல் வேண்டுமேயாகும்.
கோவில் வளாகம் முழுக்க முழுக்க இராணுவ கட்டுப்பாட்டிலும் இராணுவத்தின் கண்காணிப்புக்கும் உட்பட்ட பிரதேசமாக கடந்த 82ம் ஆண்டுக்கு பின் இருந்தமை தரவுகள் மூலம் காணக்கூடியதாக உள்ளது.
1982ம் ஆண்டு முதல் 90 முதல் பூசை வழிபாடுகளுடன் கோவில் இருந்தமையும் 90 முதல் 2002ம் ஆண்டு இராணுவ கட்டுப்பாட்டுடனும் பூசை வழிபாடுகள் இன்றியிருந்தமையும், 2002ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலம் முதல் இராணுவ அனுமதியுடன் 2003ம் ஆண்டு கும்பாபிஷேகத்துடன் பூசை வழிபாடு இன்றுவரை நடைபெறுகின்றதையும் காணக்கூடியதாக உள்ளது.
இதனை கவனித்துப் பார்க்கும்பொழுது இராணுவம் கொலை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாட்டை தட்டிக் கழிக்க முடியாதது புலனாகிறது.
இதனை கருத்திற் கொண்டு கிருசாந்தி கொலையை அரசு மறுத்து உச்ச ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட பின் கொலை செய்யப்பட்டவர்களுக்கு சட்டத்தின்  உச்ச தண்டணையான மரண தண்டணை கொடுக்கப்பட்டது யாமறிந்ததே. மேலும் மரண கைதி தனது இறுதி விருப்பமாக கிருசாந்தி கொலையை விபரம் தெரிவிக்க முன்வந்த போது மரண தண்டனை கைதி விபரம் தெரியாமல் போனதும் நாமறிந்த உண்மையாகும்.
அரசு மேலும் காலத்தைத் தாழ்த்தாமல் கிருஷாந்தி வழக்குப்போல் நடைபெற இடமளிக்காமல் தக்க பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தி கொலைப்பாதகர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தி உச்ச தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் தொடர் சிக்கலில் இருந்து அரசு ஓரளவு மீள்வதற்கான சூழ்நிலை ஏற்படும். இல்லையேல் இலங்கைக்கான இன்னல் நிரந்தரமாக மாறிவிடும் என பாஸ்க்கரா மேலும் தெரிவித்தார்.

ad

ad