நடிகை ஸ்ரீதேவி வீட்டில் தீ விபத்து
நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் மாமியார் நிர்மல் ஆகியோருடன் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீடு 2 மாடிகள் கொண்டது.
சம்பவத்தன்று மாலை ஸ்ரீதேவி தனது இளைய மகள் குஷியுடன் வீட்டின் முதல் மாடியில் இருந்தார்.
மூத்த மகள் ஜான்வி தரைதளத்தில் உள்ள தனது அறையில் இருந்தார். போனி கபூர் அருகில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இந்தநிலையில், மாலை 6.15 மணியளவில் திடீரென ஜான்வியின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
படுக்கையில் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜான்வி அலறி அடித்தபடி அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். மகளின் சத்தம்கேட்டு நடிகை ஸ்ரீதேவி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அறையில் பற்றி தீ எரிவதை பார்த்ததும் அவர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் ஜான்வியின் அறையில் இருந்த படுக்கை மற்றும் நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதற்கிடையே தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போனி கபூர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். ஜான்வியின் அறையில் உள்ள ஏர்கண்டிசன் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்ததாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.