16,000 டொலர்கள்16,440 யூரோக்கள்
கைப்பையினுள் மறைத்து வெளிநாட்டு நாணயத்தாள் கடத்தும் முயற்சி முறியடிப்புவிமான நிலையத்தில் பெண் கைது
தனது கைப்பையில் மறைத்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திய இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் கைப்பையில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 16,440 யூரோக்களையும் 16,000 அமெரிக்க டொலர்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இதன் பெறுமதி 50 இலட்சத்து 90 ஆயிரத்து 666 ரூபா ஆகும். (50,90,666) என்று சுங்க திணைக்களத்தின் சட்டப் பணிப்பாளரும் பேச்சாளருமான லெஸ்லி காமினி தெரிவித்தார். நாணயத்தாள்களை கடத்திய கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சென்னையிலிருந்து நேற்று இரவு இலங்கைக்குச் சொந்தமான யு.எல். - 124 விமானம் மூலம் இலங்கை வந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில்விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது, சந்தேக நபரான பெண்ணின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யூரோ மற்றும் அமெரிக்க டொலர் நாணயத்தாள்களை மீட்டெடுத்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணை தடுத்துவைத்த சுங்க அதிகாரிகள் விரிவான விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இதன் போது குறித்த பெண் மணி அடிக்கடி இந்தியாவுக்கு சென்று வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
மேற்படி பெண்மணி கடந்த இரண்டு வருடங்களுக்கு மாத்திரம் நான்கு தடவைகள் இந்தியாவுக்கு சென்று வந்துள்ளதாக சுங்க பேச்சாளர் சுட்டிக்காட்டினார். சந்தேக நபரான பெண்ணிடம் விசாரணை நடத்திய பிரதி சுங்க பணிப்பாளர் ஜே.ஏ.டி.ஏ. பெரேரா, சுங்க அத்தியட்சகர் சி. பேரின்பநாயகம் ஆகியோர் 10 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளனர்.