புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014


கிட்னி விற்கும் மோசடி கும்பல் சென்னையில் கைது : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் 
போலி ஆவணங்கள் தயாரித்து கிட்னி விற்கும் மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேர், சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


ஈரோடு மாவட்டம், மேலப்பாளையம் சென்னிமலையைச் சேர்ந்தவர் ஜெயமணி (38). இவருக்கு திடீரென்று கிட்னி(சிறுநீரகம்) பழுதடைந்தது. இதனால், டாக்டர்கள் அவரது கிட்னியை மாற்றியாக வேண்டும் என்று கூறினர். கிட்னி மாற்ற வேண்டுமானால், அரசு மருத்துவமனை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில்தான் அதற்கான மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். கிட்னியை தானமாகத்தான் பெற வேண்டும். அதை நெருங்கிய உறவினர்தான் கொடுக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை சென்னையில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை 7 டாக்டர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து, அனுமதி அளிக்கும். அதன் பின்புதான், கிட்னியை தானமாக பெற்ற ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்ற முடியும். இதன்படி, ஜெயமணிக்கு கிட்னி தானம் செய்ய, சென்னை தண்டையார்பேட்டை பர்மா காலனியைச் சேர்ந்த மணியின் மனைவி தேவி (35) என்பவர், தான் நெருங்கிய உறவினர் என்று சொல்லி, அதற்கான ஆவணங்களை டாக்டர்களிடம் அளித்தார். ஆனால், அந்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்று ஆய்வில் தெரிய வந்தது.


இது குறித்து கீழ்பாக்கம் போலீசில் மருத்துவக் கல்வி இயக்குநர் கனகசபை புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
தேவி, கூலி வேலை செய்கிறார். அவர் குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. இதை பயன்படுத்தி ஒரு கும்பல், அவரிடம் கிட்னியை ரூ.2 லட்சத்துக்கு விலை பேசியுள்ளது. அவரும் அதற்கு ஒப்புக் கொண்டு, தனது கிட்னியை தானமாக கொடுக்க முன் வந்தார். ஆவணங்களை பரிசீலித்ததில் அவர் மாட்டிக் கொண்டார் என்று தெரிய வந்தது.
இந்த மோசடிக்கு பின்னால் பெரிய கும்பல் இயங்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, உதவி கமிஷனர் ஜோஸ் தங்கையா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி தேவி கொடுத்த தகவலின் அடிப்படையில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சோபியா (30), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு தேவி (39), ஓட்டேரியைச் சேர்ந்த கிரிஜா (43), வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 பேரை கைது செய்தனர். அவர்கள்தான் தேவிக்கு பணம் தருவதாக கூறி ஏற்பாடு செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இப்போது பிடிபட்ட கும்பலிடம் விசாரித்தால், மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும், போலி ஆவணங்கள் தயாரிக்கும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், இந்தக் கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இதுபோல பெரிய அளவில் கிட்னி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது சென்னை சேர்ந்த கும்பல் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இப்போது மீண்டும் இதுபோன்ற மோசடி குறித்து புகார் எழுந்துள்ளது. இதனால், பிடிபட்ட மோசடி கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad