தெரிவுக்குழு விடயத்தில் சம்பந்தன் மிகச்சரியான முடிவை எடுத்துள்ளார் : ஜே.வி.பி. பாராட்டு
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. தெரிவு க்குழு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சரியானதாகும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. போராட்டத்தின் மூலமே சிறுபான்மையினரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனை சிறுபான்மையினர் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவுக்குழுவிற்கு அழைப்பதற்கு முன்னர் வடக்கு மக்களுக்கான உரிமைகளையும் கூட்டமைப்பின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை வைத்துக்கொண்டு தமிழர்களின் சுதந்திரத்தையும் அவர்களின் நிலங்களையும் பறித்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதானது வேடிக்கையான விடயமாகவே உள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவுக்குழு விடயத்தில் மிகச் சரியான முடிவினையே எடுத்துள்ளார். அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொள்ளாது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.
இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் மட்டுமே சுகபோக வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.
விலையேற்றம், வரி அதிகரிப்பினை அரசாங்கம் மேற்கொண்டு மக்களின் பணத்தை சூறையாடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தினர் உண்டு வருகின்றனர். கொழும்பு மற்றும் ஏனைய நகர்ப் புற மக்களே வாழ முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் வட மாகாண கிழக்கு மக்களின் நிலைபற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்று வடக்கில் நிலங்களையும் மக்களின் சொத்துக்களையும் அபகரித்து அம் மக்களை நடுவீதிக்கு இறக்கியுள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இத்தனை வருடங்களாக வாழ்ந்த மக்களுக்கு இன்று வரை விடிவு காலம் ஏற்படவில்லை. இனியும் தமது உரிமைகள் இந்த அரசாங்கத்தினால் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.
எனவே சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் தத்தமது நிலைமைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையினை அராஜக அரசாங்கத்திற்கு எதிராக நாம் எப்போதும் மக்கள் சக்தியினை ஒன்றுதிரட்டத் தயாராகவுள்ளோம் என்றார்.