தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள்! சந்திரிகா தலைமையில் கொழும்பில் விசேட கருத்தரங்கு
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கலந்து கொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
அத்துடன் இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர் ராதிகா குமாரசுவாமி, இந்தியாவின், பேராசிரியர் ரஜீவ் பார்கவா, பிரான்ஸ் நாட்டின் கலாநிதி கிறிஸ்டோபி ஜெப்ரீலோட் பாகிஸ்தானின் அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
அமைதியான ஒத்திணங்கிய வாழ்வு, மத சகிப்புத்தன்மை பன்மை சமூகங்கள் போன்ற தலைப்புக்களில் உரை நிகழ்த்தப்படவுள்ளன.
மதங்களுக்கு இடையில் பிணக்குளை உருவாக்கும் செயற்பாடுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பாக கருத்தரங்களில் விரிவாக ஆராயப்படும்.
கருத்தரங்கில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் 0112576666 மற்றும் 0112576555 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் info@thesapri.org என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.