வலிவடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்குக
புதிய யாழ். கட்டளைத் தளபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்
வலி வடக்கில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்தி ற்கான புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் உதய பெரேராவை, அமைச்சர் கடந்த 17ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
நாவற்குழி, கைதடி, நுணாவில் ஆகிய பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்களும், செம்மணி, வலி வடக்கு வலித்தூண்டல், தெல்லிப்பளை அம்பன் பகுதியிலிருந்த இராணுவ முகாம்கள் மற்றும் காவலரண்களை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்தமை தொடர்பில் அமைச்சர், உதய பெரேராவுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
அதேபோன்று வலி வடக்கில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள தனியார் காணிகளை அவர்களின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் இச்சந்திப்பில் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமன்றி யாழ்ப்பாணம் குருநகரிலிருந்து பண்ணை வரை அமைந்துள்ள கரையோரப் பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகளை அகற்றி மக்களின் பாவனைக்கு விடுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இது விடயம் தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி உதய பேரேரா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் உறுதியளித்துள்ளார்.