அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார அமைச்சு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் சில தினங்களில் இலங்கைக்கு வருகைதரவுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மேலும் குறிப்பிடுகையில்,
குறித்த அமெரிக்க உயர் அதிகாரி அந்தப் பதவிக்கு வந்த பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை முதற் தடவையாக மேற்கொள்கின்றார். விடயம் அவ்வளவுதான். இலங்கைக்கு மட்டுமல்ல இப்பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார். அந்தவகையில் இதுவொரு வழமையான விஜயமாகும்.
இந்நிலையில் நிஷா தேசாய் பிஷ்வாலின் இலங்கை விஜயத்தையும் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரையும் தொடர்புபடுத்துவது அவசியமற்றதாகும்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரை பொறுத்தமட்டில் இலங்கையானது சிறந்த முறையில் அதற்கு தயாராகி வருகின்றது. குறிப்பாக யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நாங்கள் பல்வேறு முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.
மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் 25ம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
இம்முறை மனித உரிமைப் பேரவையின் 25வது கூட்டத் தொடருக்கு இலங்கையிலிருந்து அமைச்சர்கள் மட்ட தூதுக்குழு கலந்துகொள்ளும் என அறிய முடிகின்றது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்தார். அந்த வகையிலேயே மார்ச் மாதம் 25 ம் திகதி தனது இலங்கை குறித்த அறிக்கையை பேரவையில் முன்வைக்கவுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான விசேட அறிக்கையாளர் டாக்டர் சலோகா பெயானி இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்திருந்ததுடன் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
இது இவ்வாறு இருக்க ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை கூட்டத் தொடரில் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக ஆதரவைத் திரட்டும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிகின்றது.
மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி இலங்கையின் முன்னேற்ற நிலைமைகள் குறித்து விளக்கி ஆதரவை திரட்டும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடவுள்ளதாக இராஜதந்திர மட்டங்களிலிருந்து தெரியவருகின்றது.