இந்து மதம் குறித்து பொதுக்கூட்டங்களில் அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை மற்றும் திருச்சியில் கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. இக் பொதுக்கூட்டங்களில் பேசிய சீமான், இந்து மதத்தையும், அதை பின்பற்றுபவர்கள் பற்றியும் இழிவாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இந்து மதக் கடவுள்களை பற்றியும் அவதூறாக பேசினாராம்.இது குறித்து இந்து இயக்கங்கள், அண்மையில் தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் செய்தன. இந்த புகார் குறித்து விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.ராமானுஜம் உத்தரவிட்டார்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸார், அந்த புகார் குறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சீமான் இந்து மதத்தைப் பற்றி அவதூறாக பேசியிருப்பது தெரியவந்தது.இதையடுத்து சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சீமான் மீது மதம் மற்றும் மதக் கோட்பாடுகளை புண்படுத்தும்படி இழிவாகப் பேசியதாகவும், பிறர் மனம் புண்படும் பேசியதாகவும் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.