புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

இலங்கையில் புற்றுநோயினால் 14,000 பேர் உயிரிழப்பு

வாய்ப்புற்றுநோய்க்கு 2,500பேர் பலி
* 25,842 பேர் சிகிச்சைக்குப் பதிவு
* வெற்றிலைக் கூறு உண்ணும்போது புற்றுநோய்க்கு துணைபுரியும் 32 வகை இரசாயனம் வாயினுள் விடுவிப்பு
* இலங்கையில் 6 வகை புற்றுநோய் பதிவு

இலங்கையில் புற்று நோய்கள் காரணமாக 14 ஆயிரம் பேர் 2013 ஆம் ஆண்டில் மாத்திரம் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் புற்றுநோய்களால் உயிரிழந்தவர்களில் 2500 பேர் வாய்ப்புற்று நோய் காரணமாக மரணமடைந்தி ருப்பதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த வருடம் 25,842 பேர் இந்நாட்டிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்துள்ளனர் என்றும் அமைச்சு குறிப்பிட்டிருக்கின்றது.
ஒருவர் ஒரு வெற்றிலைக் கூறை மெல்லும் போது அதில் உள்ளடங்கி இருக்கும் பாக்கும், புகையிலையும் புற்று நோய்க்குத் துணைபுரியக்கூடிய 32 இரசாயனத் திரவங்களை வாயினுள் விடுவிப்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இவ்வாறு வாயினுள் விடுவிக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் வாயின் கலங்களினுள் சேர்வதற்கான வாய்ப்பை சுண்ணாம்பு ஏற்படுத்திக் கொடுப்பதும் உறுதிப்படு த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் மேலும் குறிப்பிட்டி ருப்பதாவது :
தற்போது இலங்கையில் 6 வகையான புற்றுநோய்கள் பதிவாகின்றன. அவற்றில் வாய்ப்புற்று நோய், தொண்டைக் குழி புற்றுநோய், மார்பு புற்று நோய், கருப்பை புற்று நோய், இரைப்பை புற்றுநோய் என்பன குறிப்பிடத்தக்கவைகளாகும்.
இவற்றில் மூன்று வகையான புற்றுநோய்களுக்கு வெற்றிலைக் கூறு மெல்லுதல் மதுபானம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய பழக்கங்கள் பாரிய பங்களிப்புச் செய்கின்றன. இப்பழக்கங்களிலிருந்து மக்களை விடுவித்தால் புற்று நோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையைப் பெரிதும் குறைத்துக் கொள்ள முடியும். அத்தோடு இந்நோய்கள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.
அதேநேரம், இந்நாட்டுப் பெண்கள் மத்தியில் பெரிதும் இனம் காணப்படுகின்ற மார்பு புற்றுநோயையும் கருப்பை புற்றுநோயையும் முன்கூட்டியே இனம் கண்டு சிகிச்சை அளித்தால் அவற்றை முழுமையாகக் குணப்படுத்தி விடமுடியும்.
வெற்றிலை மெல்லுதல், புகைப்பிடித்தல் மற்றும் மதுபானப் பாவனை ஆகிய மூன்று பழக்கங்களும் உயிராபத்து மிக்கவை. இப்பழக்கங்களின் பாதிப்புகளை அறிந்து கொள்ளாத நிலையிலேயே அவற்றுக்குப் பெரும்பாலானோர் உள்ளாகியுள்ளனர். இவை தொடர்பான தெளிவைப் பெற்றுச் செயற்பட வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
இதேவேளை பெளத்த தேரர்களுக்கு தானம் வழங்கும் போது வெற்றிலையுடன் சேர்க்கும் பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு என்பவற்றுக்கு பதிலாக பழங்காலத்தில் வெற்றிலைத் தாம்பூலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சாதிக்காய், சாதிப்பத்திரி, சுக்கு, கராம்பு, ஏலம் ஆகிய மருத்துவ குணம் கொண்ட பொருட்களை வழங்கும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று முன்தினம் ஹிங்குராக்கொட ரஜரட்ட வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது தெரிந்ததே

ad

ad