ஈழத்துக்கு எதிரான 2ஆம் கட்ட போரை ஆரம்பிக்க வேண்டும் - அமைச்சர் வீரவன்ஸ
-
ஈழத்துக்கு எதிரான இரண்டாம் கட்டப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறை கூவல் விடுத்துள்ளார்.
மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
பிரிவினைவாதத்தைப் பேசுகின்ற அல்லது அதனைப் பகிரங்கமாக ஆதரிக்கின்ற குழுக்களைத் தடை செய்யவேண்டும். எதிர்வரும் மாகாணத் தேர்தல்களை இந்தக் குழுக்களைத் தோற்கடிக்கின்றமைக்கான பொதுசன வாக்கெடுப்பாக நாம் பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் ஈழத்துக்கு எதிரான இரண்டாம் கட்டப் போரை ஆரம்பிக்க வேண்டும்.
அரசை மாற்றுகின்றமை குறித்து யாரும் பேசமுடியும்.ஆனால் நாட்டைப் பிரிக்கின்றமை குறித்து யாரும் பேச முடியாது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தங்கள் மீது கொண்டு வரப்படுகின்ற திருத்தங்கள் பிரிவினைவாதத்துக்கு இடம் இல்லை என்பதைக் கட்டா யம் உறுதிப்படுத்துவனவாக அமைய வேண்டும் என்றார்.