புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2014

யாழ். பல்கலைக்கழகம் உலகத் தரம் வாய்ந்தது: உயர் கல்வியமைச்சர்
சகல பீடங்களையும், கற்கை நெறிகளையும் கொண்டமைந்ததாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் அமையப்பெற்றுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் ஆரம்ப சமய நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சகல பீடங்களையும், கற்கை நெறிகளையும் கொண்டதாக பேராதனை பல்கலைக் கழகம் விளங்கி வருகின்ற நிலையில், அதற்கு அடுத்த படியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே விளங்குகின்றது.
இதேபோன்று குறித்த இரு பீடங்களையும் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு அவற்றுக்கான நிலப்பரப்புகள் போதுமானதான நிலப்பரப்பு இல்லாத நிலை காணப்படுகின்றது.
வடக்கில் கிளிநொச்சியில் அதிகமான நிலப்பரப்பை கொண்டுள்ளதாக பொறியியல் மற்றும் விவசாய பீடங்கள் அமையப் பெற்றுள்ள நிலையில் ஏனைய பீடங்களையும் விரிவாக்கம் செய்வதற்கான நிலப்பரப்பு காணப்படுகின்றது.
இங்கு அதிகளவிலான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பொருட்டு விடுதி வசதிகளும் செய்யப்படவுள்ளன.
இந்நிலையில் எமது இலக்கிற்கு அமைவாக அதிகளவான மாணவர்கள் தமது கற்கை நெறிகளை மேற்கொள்ள முடியுமென்றும், பல்கலைக் கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது, இனம், மதம் மொழி என்ற பாகுபாடுகளுக்கு அப்பாலேயே இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.
இதன்மூலமே சமூக ஒருமைப்பாடு, சமாதானம், நட்புறவு மற்றும் சட்டம், ஒழுங்கை பேண முடியுமென்பதற்கு அப்பால் ஐக்கியமுள்ள தேசத்தை கட்டியெழுப்ப முடியும்.
கொடூர யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கும் தற்போதுள்ள சமாதான சூழலுக்காகவும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர் உடமைகளை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்பதுடன், 43 நாடுகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு விடுதி வசதியுடன் தமது கற்கை நெறிகளை மேற்கொள்ள வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கான நினைவுக் கல்லினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சகிதம் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் பொறியியற் பீட பீடாதிபதி கலாநிதி அற்புதராஜா, விவசாய பீடாதிபதி கலாநிதி சிவமதி சிவச்சந்திரன், யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன், ஈ.பி.டி.பியின் வட மாகாண சபையின் உறுப்பினர் வை.தவநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் பீடாதிபதிகள், பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ad

ad