ஈழத்தமிழர்களின் குடியுரிமைக்காக ஒரு கோடி கையெழுத்து பெறும் பணி ஆரம்பம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல இதற்கு ஆதரவாக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
கோவையில் வாழும் கலை அமைப்பின் சார்பில், மூன்று நாள் நடக்கும் சத்சங்கம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு தெரிவித்தாவது,
இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் குடியிரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். இதுவரை 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம். ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல. பல நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கி இருக்கும் நிலையில், இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்க கூடாது? எனவம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.