புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


பிரபாகரனுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு-விகடன் 
இலங்கையில் பிரபாகரன் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. இவ்வாறு தமிழக ஆனந்த விகடன் சஞ்சிகையின் விகடன் மேடை பத்தியில் வாசகர்களின் வினாக்களுக்கு அ.முத்துலிங்கம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி - 'பிரபாகரன் குறித்து?
பதில் - என்னுடைய மேசையில் உலக வரைபடம் ஒன்று ஒட்டப்பட்டிருக்கிறது. இது 60 வருடங்களுக்கு முந்தைய உலகப்படம். இந்த வரைபடத்துக்கும் இன்றைய உலகத்துக்கும் சம்பந்தம் கிடையாது. படத்தில் காணப்படும் நாடுகள் பல இப்போது கிடையாது.
இன்றைய நாடுகள் பல அப்போது இல்லை. உதாரணமாக, கொசோவோ, சேர்பியா, கிழக்கு திமோர், எரித்திரியா, தெற்கு சூடான் ஆகிய எல்லாமே புதிய நாடுகள். இன்னொரு நாட்டில் இருந்து பிரிந்து தனி நாடானவை.
1995-ம் ஆண்டு கனடாவின் மாகாணமான கியூபெக்கில் நடந்த வாக்கெடுப்பைப் பார்த்து நான் அதிசயித்தது உண்டு. 'கியூபெக், தொடர்ந்து கனடாவில் அங்கமாக இருக்க வேண்டுமா அல்லது பிரிந்துபோக வேண்டுமா?’ இதுதான் கேள்வி.
 50.58 சதவிகிதம் மக்கள் 'பிரியக் கூடாது’ என்று வாக்களித்தார்கள். 49.42 சதவிகிதம் பேர் 'பிரியவேண்டும்’ எனும் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். இந்தத் தீர்ப்பின் பிரகாரம், கியூபெக் மாகாணம் இன்றும் கனடாவின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது. மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் கியூபெக் பிரிந்துபோக முடியவில்லை.
இப்படி ஒரு நாட்டிலிருந்து பிரிவதற்கு வழி, பொது வாக்கெடுப்பு. இரண்டாவது, சமாதானப் பேச்சுவார்த்தை. மூன்றாவது... போர். 30 ஆண்டுகளாக வடக்கு அயர்லாந்தில் அடக்குமுறையை எதிர்த்துப் போர் நடந்தது. இறுதியில் பேச்சுவார்த்தையில் வெற்றி கிட்டியது. அதற்குப் பாடுபட்ட ஜோன் ஹியூம் என்பவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராஃபத், பாலஸ்தீனத்தை மீட்பதற்காகப் போராடினார். 1993-ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு இவர் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 1994-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நெல்சன் மண்டேலாவை எடுப்போம். இவர் வெள்ளையர் அடக்குமுறையை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடினார். சிறையில் அடைத்தார்கள். தன் வழியை மாற்றி அகிம்சைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
அவர் விடுதலையாகி தென் ஆப்பிரிக்காவின் தலைவர் ஆனார். அவருக்கு 1993-ல் சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஒரு புது நாடு, பேச்சுவார்த்தை மூலம் உண்டாகலாம். கனடாவில் செய்ததுபோல பொது வாக்கெடுப்பதும் ஒரு வழி.
இலங்கையில் பிரபாகரன் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. உலக நாடுகள் பெரிதும் அக்கறை காட்டாததால், சமாதானம் தள்ளிப்போனது. அதில் வெற்றி கிட்டியிருந்தால், இன்று அமைதி நிலவியிருக்கும். பிரபாகரனுக்கு நோபல் சமாதானப் பரிசு சாத்தியமாகியிருக்கும். ஒரு புது நாடும் கிடைத்திருக்கும்! ஹும்ம்.. என்ன செய்வது!?

ad

ad