எம் வி சன் சீ கப்பலில் வந்து சிறைப்பிடிக்கப்பட்ட தர்மரத்தினம் அருமைத்துரை நிலைமை என்ன – உண்மைக் கதை .
பிரிட்டிஷ் கொலம்பியா மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனித கடத்தல் என்று குற்றச்சாட்டப்பட்ட எம்.வி. சன் சீ கப்பலில் வந்தோரை கனடிய குடிவரவு அதிகாரிகள்
பிடித்து சிறை வைத்தனர். அதிலிருந்த பயணிகளில் ஒருவர் மற்றும் கப்பல் சொந்தக்காரர் தவிர மற்ற அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் தர்மரத்தினம் அருமைத்துரை தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருவதால் நிலை என்ன என்பது குறித்த செய்தியொன்றினை கனடிய பிரதான ஆங்கில நாளேடுகளில் ஒன்றான நேஷனல் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது ,
தர்மரத்தினம் அருமைத்துரை என்ற 40 வயதான அவர், சிறையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கடைசி நபர் ஆவார் கப்பல் உரிமையாளர் மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதே இவரை மட்டும் தடுத்து வைத்திருப்பதற்கான காரணம் எனக் கருதப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்டகால உறுப்பினராக இருந்தவர் தர்மரத்தினம் அருமைத்துரை.
வேலு என்ற பெயரில் புலிகள் அழைக்கப்பட்ட தர்மரத்தினம் அருமைத்துரை ஏழு ஆண்டுகளாக அவ்வமைப்பின் ஆயுதப் பயிற்சி, ஆயுதக் கடத்தல் , போராட்டம் என பல வேலைகளைச் செய்து வந்தார். கடைசியாக ஏமாற்றம் அடைந்து மற்ற போராளிகளுடன் சேர்ந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் போது, இந்த கடத்தல் கப்பல் பற்றிய தகவல்கள் அவருக்குக் கிடைத்தது.
அவரது குடும்பம் அவருக்கும் கொடுத்த 20,000 டாலர்கள் பணம், கப்பல் கட்டணத்தைச் செலுத்தி ஒரு புது வாழ்க்கை அமைத்துக் கொள்வதற்காக இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக அவர் சிறை முற்றத்தில் கைப்பந்து விளையாண்டு கொண்டும், ஆங்கில வகுப்புகள் எடுத்தும், தையல்காரர் கடையில் வேலை பார்த்தும், சிறையில் உள்ள சீருடைகளுக்கு தையல் திருத்தங்களைச் செய்து கொடுத்தும் கடந்த மூன்றரை ஆண்டுகளைக் கழித்துள்ளார். அவரது 51 வது காவல் விசாரணை புதன்கிழமை நடைபெற்ற போது வழக்கம் போல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஃப்ரேசர் பள்ளத்தாக்கு சிறைக்கு மீண்டும் அவரை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் தர்மரத்தினம் அருமைத்துரையின் விதி ஒரு நிச்சயமற்ற நிலையை நோக்கியே சென்று கொண்டிருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.