புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2014

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் 
news

இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இது குறித்து சட்டப்பேரவையில் நேற்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தி
ன் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியதாவது:
இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொறுத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில் சர்வதேச போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும்.
இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும;.அதுவரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழ் ஈழம் குறித்து இலங்கையில் உள்ள மற்றும் வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை நாட்டில் நடைபெறும் அனைத்துக் கூட்டங்களையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும். இலங்கை வீரர்கள் எவருக்கும் ராணுவப் பயிற்சியை இந்தியாவில் அளிக்கக் கூடாது. இலங்கை நாட்டுடனான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்பனவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இது குறித்து பல்வேறு கால கட்டங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. எந்த ஒரு தீர்மானத்தின் மீதும் மத்திய அரசு இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு அப்போது ஆதரவு அளித்த தி.மு.க.வும் வாய் மூடி மவுனியாகத்தான் இருந்தது.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும், மத்திய அரசு வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த மாநாட்டிற்கு அனுப்புவதில் உறுதியாக உள்ளது என்பதை அறிந்து
கடைசி முயற்சியாக, மாநாடு கூடுவதற்கு இரு நாட்கள் முன்பு இந்த மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பாக எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றினோம்.
இந்தத் தீர்மானத்தினை, தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டார். மத்திய அரசின் இந்தச் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக நான்கு நாடுகள் தீர்மானம் கொண்டு வரப்போவதாக செய்திகள் வந்துள்ளன.
எங்களைப் பொறுத்த வரையில், இந்தியாவே, இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களை தண்டிக்க தனித் தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்து அதற்கு ஆதரவாக மற்ற நாடுகளை வாக்களிக்க வைத்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இதனை நிச்சயம் நிறைவேற்றாது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அப்போது ஆட்சி மாறும். காட்சிகளும் மாறும். மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கக் கூடிய நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும். அப்போது, ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து, அதனை வெற்றி பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

ad

ad