மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் ரெயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் சுகுமாரன் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சுதர்சன்நகர், காந்தி தெருவில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் காலை சென்னையை சேர்ந்த அவர்களது உறவினர் அவர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள், வேப்பம்பட்டுக்கு விரைந்து வந்தனர். வீட்டின் கதவு உள்புறமாக பூட்டிக்கிடந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது வீட்டின் உள்ளே உள்ள அறையில் சுகுமாரன், அவரது மனைவி ஜெயந்தி குழந்தைகள் ஆஷா, ஹரீஷ் ஆகிய 4 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்த சுகுமாரன் ரெயில்வேயில் வேலை செய்வதால் அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் சுகுமாரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.