புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014

ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக பிப்ரவரி 26ல் நமது முழக்கம் விண்ணை எட்டட்டும் என ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''ரத்தம் சிந்தியும், உயிர்களைக் கொடுத்தும் ஈழ விடுதலைக்காகப் புலிகள் செய்த மகத்தான தியாகம் ஒருபோதும் வீண் போகாது.
2009ஆம் ஆண்டில், கொலைபாதக சிங்கள அரசைப் பாராட்டி, ஜெனீவாவின் மனித உரிமைக் கவுன்சிலில், இந்திய-சீன-கியூப அரசுகளின் முயற்சியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகெங்கும், தமிழகத்திலும் நீதிக்காகத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளந்தலைமுறையினர் நடத்திய அறவழிக் கிளர்ச்சிகளால், மனித குலத்தின் மனசாட்சி மெல்ல மெல்ல விழித்துக் கொண்டது.

நீதி கேட்கும் குரல் பலமாக எழுந்ததால், ஐ.நா. மன்றம் நியமிக்க நேர்ந்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, தமிழ் இனப் படுகொலையைத் தெரிவித்தது. ஜெனீவாவின் மனித உரிமைக் கவுன்சிலில், 2009க்குப் பின்னர், நீதிக்கான நகர்வு மெதுவாக இருந்தாலும், எதிர்வரும் மார்ச் திங்களில், ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25வது கூட்டத் தொடரில், இனக்கொலை செய்த இலங்கை அரசைக் குற்றக்கூண்டில் நிறுத்த, அனைத்துலக நீதி விசாரணை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
கரிய இருளில் ஒளிக்கீற்றாக, ஜெர்மனியில் 2013 டிசம்பர் 10ஆம் தேதி அன்று, மக்கள் தீர்ப்பு ஆயத்தின் பிரகடனம் வந்து உள்ளது. அதில், ‘இலங்கையில் நடந்தது வெறும் போர்க்குற்றம் அல்ல; ஈழத் தமிழ் இனப்படுகொலைதான். சிங்கள அரசு இந்த இனப்படுகொலையை, விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு முன்பு இருந்தே நடத்தி வருகிறது; 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் தமிழ் இனக்கொலை தொடர்கிறது என்று துடிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஆறுதல் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அறிவித்து விட்டது. 

சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளும் ஆயுத உதவி செய்து உள்ளன என்று கூறியதோடு, இந்திய அரசு, இலங்கை அரசுக்குச் செய்த அனைத்து உதவிகள் குறித்தும் ஆய்வு நடத்துவதாகவும் அறிவித்து உள்ளது. எனவே, நடந்தது தமிழ் இனப்படுகொலை; இனி நடக்க வேண்டியது கொலைகாரக் கொடியோரைக் கூண்டில் நிறுத்தும் விசாரணை என்பதை, உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் உரத்த குரலில் சொல்வோம்.
சுதந்திரத் தமிழ் ஈழத்தை மீட்க வேண்டிய கடமை, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு உண்டு. ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, மார்ச் 10 ஆம் நாள், ஜெனீவா முருகதாசன் திடலில் ஒன்றுகூடிக் குரல் எழுப்ப, வீரத்தியாகி முத்துக்குமார் நினைவு நாளான ஜனவரி 29ல் நீதிக்கான ஒரு நடைபயணத்தையும் தொடங்கி உள்ளனர். தரணி வாழ் தமிழர்கள் அனைவரும், சாதி மதம், கட்சி, தேச எல்லைகளைக் கடந்து, ஒன்றாகச் சங்கமித்து, ஈழத்தமிழர் விடியலுக்கும் நீதிக்கும் ஓங்கிக் குரல் கொடுப்போம். 

தமிழர்களின் அறப்போர்க் குரல் ஒலிக்க வேண்டிய தினமாக பிப்ரவரி 26ஆம் தேதியை அறிவிக்க லண்டன் மாநகரிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தீர்மானித்து உள்ளனர். எனவே, பிப்ரவரி 26ஆம் தேதி, உலகம் எங்கிலும் தமிழர்களின் நீதிக்கான முழக்கம் வீறுகொண்டு எழட்டும். தாய்த் தமிழகத்திலும், நீதி கேட்கும் முழக்கம் விண்ணை எட்டட்டும். தலைநகர் சென்னையிலும், மாவட்ட, வட்டத் தலைநகரங்களிலும், நீதி கேட்கும் குரல் எட்டுத் திசையிலும் ஒலிக்கட்டும். ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக, நாம் ஒன்றுகூடிக் குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில், கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன். பிப்ரவரி 26ல் ஓங்கி எழட்டும் நமது சங்கநாதம்!'' எனக் கூறியுள்ளார்.

ad

ad