புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

ஜெனீவாவில் முழங்கிய ஆனந்தி சசிதரன் 
இலங்கையில் தமிழர் பகுதியில்  இராணுவ ஆக்கிரமிப்பும் பாலியல் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐ.நா பேரவையில்  அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றியுள்ளார்.

ஐ.நா.சபையில் அனந்தி தொடர்ந்து உரையாற்றுகையில்,


இலங்கைத்தீவின் வட மாகாண சபையில் தேர்தலூடாகாத் தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக இன்று நான் இங்கு நிற்கிறேன். பெரு மதிப்புக்குரிய இந்தப் பேரவையானது பெருங்குற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.

போரின் முடிவில் எனது கணவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததௌ நேரடியாக பார்த்த சாட்சியமாக காணாமற்போரைத் தேடிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருள் ஒருத்தியாக அவர்களையும் நான் இங்கு பிரதிதிநிதுவப்படுத்துகிறேன்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்ததில் ஆயிரக்கணக்கில் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐ.நா மன்றமும் சொல்லியிருக்கிறது. இன அழிப்புப் போரின் பின்னராக இன்னமும் 146,000 இற்கும் அதிகமானவர்களின் நிலை என்னவென தெளிவுபடாத நிலையில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் தமிழ் இன அழிப்பு வேறு வடிவங்களில் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

இலங்கை இராணுவம் எமது தாயகத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆக்கிரமிப்பும்  இராணுவத்தினரின் தொகையும் அதிகரித்து வருகிறது. எமது காணிகள் மீது எமக்கே உரிமை இல்லாத நிலை காணப்படுகிறது. எமது மண் எம்மிடமிருந்து ஸ்ரீலங்கா இராணுவத்தாலும் சிங்களவர்களாலும் பறிக்கப்படுகிறது.

இன்றுகூட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான அருட்தந்தை பிரவீன் அவர்களும், ருக்கி பெர்ணாண்டோ அவர்களும் ஒரு தமிழ்த் தாயினதும், மகளினதும் மனித உரிமைக்கு குரல் கொடுக்க கிளிநொச்சி சென்றதற்காக பயங்கரவாத தடைச் சட்ட சரத்துக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இராணுவ ஆக்கிரமிப்பினால் எமது பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமையால் பாலியல் வன்முறையும் நாளாந்தம் நடக்கின்ற நிலையாகிவிட்டது.

பல இந்துக் கோயில்களும், தேவாலயங்களும் அழிக்கப்பட்டு அங்கு புத்த சிலைகள் நிறுவப்படுகின்றன. எமது பண்பாடு நாளாந்தம் சீரழிக்கப்படுகிறது. சிங்கள அரசு எமது மண்ணையும், பண்பாட்டையும், வரலாற்றையும், ஏன் எமது மனப் பதிவுகளையும் கூட அழித்துவிட முனைகிறது. இவையெல்லாவற்றையும் பற்றி பல அறிக்கைகள் பேசுகின்றன.

பிரேமனில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடந்ததென்பதையும், இன அழிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது என்பதையும் அறுதியிட்டுச் உரைத்திருக்கிறது.

அப்படியிருந்தும், ஐ.நா மன்றம் இதைத் தடுத்து நிறுத்த எதுவும் செய்யவில்லை. இன அழிப்பு நடைபெறுகிறது என்பதை அங்கீகரிக்கவும் இல்லை. தாயகத்தில் இருக்கும் தமிழர்களுக்கு குரல் கொடுக்கவல்ல ஒருத்தியாக நான் இதைச் சொல்கிறேன். இங்கு கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானங்கள், தற்போது முன்வைக்கப்படவிருக்கும் நகல் உட்பட, பலனளிக்காமல் இருப்பது குறித்து எமது மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இவை தீர்க்கவில்லை. தமிழ் என்ற சொல்லே இல்லாத நிலையே காணப்படுகிறது.

ஸ்ரீலங்கா அரசு தன்னைத் தானே மாற்றிக்கொள்ளும் தகைமை அற்றது. அது ஒரு இன அழிப்பு அரசு. அது தன்னைத் தானே விசாரிக்கும் ஆற்றல் அற்றது. எனவே இன அழிப்பு மீதான ஒரு சுயாதீனமான, சர்வதேச விசாரணை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படவேண்டும்.

நான் இங்கு மீண்டும் ஒரு தாயாகவும், எமது தாயகத்தில் தமிழ்த் தாய்மாரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருத்தியாகவும் பேசுகிறேன். எமது குழந்தைகளினதும் எமதும் எதிர்காலம் எமது அடையாளத்துடனும், பாதுகாப்பானதாகவும், அமைதியானதாகவும், சுயமரியாதை கொண்டதாகவும், நியாயமானதாகவும் அமைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

மிகவும் கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு 60 வருடத்துகும் மேலாக உட்படுத்தப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசத்திற்கு நியாயம் நல்க வேண்டிய கடமைப்பாடு இந்த உலகின் கைகளிலேயே உள்ளது என தனதுரையில் தெரிவித்துள்ளார்.

ad

ad