தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது
தமிழக மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நிபந்தனையை ஏற்கமுடியாது. விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு வரட்டும். எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என கடற்றொழில் நீரியல்
வளத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால்தான் எதிர்வரும் 25ம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பில் கேட்டபோதே அமைச்சர் ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு கூறினார்.
தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்குமிடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த 13ம் திகதி கொழும்பில் நடைபெறவிருந்தது. எனினும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவித்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வரமுடியும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதனால் இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 174 மீனவர்கள் அவர்களது வள்ளங்களுடன் விடுவிக்கப் பட்டதுடன், பேச்சுவார்த்தை இம்மாதம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தமிழகத்துக்கும் அறிவிக்கப்பட்டது.
25ம் திகதி 25ம் திகதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த 19ம் திகதி எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 53 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பிலும், 21 மீனவர்கள் மன்னார் கடற்பரப்பிலும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலேயே 25ம் திகதி பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்துகொள்வார்கள் என தமிழக முதல்வர் மீண்டும் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் தொடர்ந்தும் விடுத்துவரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, விரும்பினால் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரட்டும் எல்லைதாண்டி மீனவர்கள் வரும்போது அவர்களை கைது செய்யும் அறிவித்தார் எமது நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.