புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

 மன்னார் புதைகுழி விவகாரத்தை திசை திருப்பும் சிறிலங்கா அரசின் முயற்சி  குறித்தும், வடக்கில் இடம்பெறும் நில அபகரிப்புத் தொடர்பாகவும், கொழும்பில் இன்று நடந்த விழாவொன்றில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். 
இன்று பிற்பகல் கொழும்பில் நடந்த வீரகேரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பான, "தரிசனம்" நூல் வெளியீட்டு

விழாவில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 

அரசாங்கம் தென்னிலங்கைச் சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தினால் அடுத்த தேர்தலில் சிங்கள வாக்குகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருகிறது. 

வடமாகாணசபையின் ஒத்துழைப்பை நல்க முன்வந்த எனக்கு நற்சமிஞ்ஞைகளை முதலில் காட்டி விட்டு எம்மை அலட்சியம் செய்வதிலேயே அரசாங்கம் அக்கறை காட்டி நிற்கிறது. 

எமக்கு ஒத்துழைப்பை நல்குவதால் அனைத்துலக சமூகத்தின் நெருக்குதல்களைத் தணிக்க முடியும் என்பதில் நம்பிக்கை அற்றே அரசாங்கம் செயற்படுகிறது. 

மாகாணசபை முதல்வரின் கருத்தொருமித்தலுடன்தான் தலைமைச் செயலர் நியமிக்கப்பட வேண்டும் என்ற மாகாணசபைகள் சட்டம் பிரிவு 32இன் ஏற்பாடுகளுக்கு எதிராக அதாவது நடைமுறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக, அரசாங்கம் தனக்குகந்த தலைமைச் செயலரை பதவியில் நீடிக்கச் செய்துள்ளது. 

போர்க்காலத்தின் போதான முன்னைய படைத் தளபதியைத் தொடர்ந்து ஆளுநராக வைத்திருந்து, அவரைக் கொண்டு மாகாணசபைகளுக்கு என்ன உரித்து இருக்கின்றது, எல்லாம் ஆளுநர் வசமே என்ற கருத்தை நிலவச் செய்து, இந்த வடமாகாண சபையால் எதுவுமே செய்ய முடியாது, அவர்கள் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைக் கரவாக எம் மக்கள் மனதில் விதைக்க அரசாங்கம் கடுமையாகப் பாடுபட்டு வருகின்றது. 

இன்று வன்னியில் நடப்பதை எடுத்துக் கொள்வோம். 

மாந்தையில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட இடம் ஒரு மயான பூமி என்றுள்ளார் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்கள பணிப்பாளர் நாயகம். 

இதன் சரி பிழையை பத்திரிகைகள் எடுத்துக் காட்டாது விட்டுவிட்டால் உண்மை விலைபோய்விடும். 

நாம் ஆராய்ந்து பார்த்ததில் அறுபது வருடங்களுக்கு முன்னர் பூர்வாங்க வரைபடமிலக்கம் S-677ஆனது 2.12.1955ல் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதில் துண்டுகள் 31ம் 32ம் இணையும் இடத்தில்தான் மேற்படி மயான பூமி என்று கூறப்படும் இடம் இருந்திருக்க வேண்டும். 

ஆனால் இவ்விடத்திற்கு ஒரு பக்கம் தெரு. மறுபக்கம் குளம். 

இந்தத் துண்டு 31 ஆனது திருக்கேதீஸ்வரத்துக்குக் கொடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் துண்டு. 

துண்டு 32க்கு முன்புறத்தில் தெருவின் அடுத்த பக்கத்தில் மேற்படி வரைபடத்தின் படி ஒரு சுற்றுலா பங்களா இருந்திருக்கின்றது. இது போரின் போது அழிந்துவிட்டது. 

அத்துடன் துண்டு 32ல் ஒரு பலசரக்குக் கூட்டுறவுக் கடையொன்றும் இருந்திருக்கின்றது.

இது இவ்வாறிருக்க துண்டு 32ல் மயான பூமி அமைந்திருந்தது என்பது கட்டுக்கதைபோல் தென்படுகின்றது. 

கத்தோலிக்க மயான பூமி ஒன்று மேற்குப் புறத்தில் அங்கிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் இருப்பது உண்மை. 

ஆனால் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் இந்துக்கள் வாழ்ந்த இடம். 

இந்துக்கள் பிரேதங்களைப் புதைப்பது இல்லை. எனவே பணிப்பாளர் நாயகத்தின் கூற்று கேள்விக்கிடமாகியுள்ளது. 

இது பற்றி இன்று ஆசிரியத் தலையங்கம் எழுதினால் வருங்காலத்தில் அது ஒரு வரலாற்று பூர்வமான கட்டுரையாகிவிடும். 

மக்கள் இன்றே உஷாராகிவிடுவார்கள். வெளிநாடுகள் விழித்துக் கொள்ளும். 

இன்னுமொரு இன்றையகாலச் செய்தி. 

வவுனியாவில் இருக்கும் கொக்கச்சாங்குளம் வவுனியா வடக்கைச் சேர்ந்தது. அதன் ஒரு பகுதி முல்லைத்தீவுக்கும் உரியது. 

அதாவது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடமிது. 

அண்மையில் இதனை வவுனியா தெற்கின் கீழ் அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. 

அதாவது சிங்களவர் வாழும் பகுதியின் நிர்வாக அலகின் கீழ் மாற்றியுள்ளது. 

கொக்கச்சாங்குளம் இப்பொழுது களுபோகஸ்வவ என்று பெயர் மாற்றப்பட்டு 5000 சிங்களக் குடும்பங்களை அங்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கு இராணுவம் முழு ஒத்தாசையையும் வழங்கி நிற்கின்றது. 

கொண்டு வரப்படும் 5000 குடும்பங்களும் வடமாகாணத்திற்கு அப்பால் வசிக்கும் குடும்பங்கள். 

இதுவரை வடமாகாணத்துடன் தொடர்பு கொண்டிராத குடும்பங்கள். 

மேலும் வவுனியா பாவற்குளத்தில் சுமார் ஒன்பது சதுர கிலோமீற்றர் இடத்தில் 600 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறார்கள். 

மேலும் 2009ல் உள் நாட்டில் குடிபெயர்ந்தவர்களை இருத்த உபயோகப்பட்ட மனிக்பாம் முகாமானது தற்போது சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு காரணங்கள் கூறப்படவில்லை. 

இராணுவம் பல காணிகளையும், பண்ணைகளையும் தம் வசம் ஒப்படைக்கும்படி கூறி, உறுதி முடித்துத் தருமாறு எங்கள் அதிகாரிகளைக் கட்டாயப்படுத்துகின்றார்கள். 

கிழக்கில் நடைபெற்ற கட்டாயமான குடிசன விகித மாற்றம் தற்போது வடக்கில் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

அதற்கு இராணுவம் உற்ற துணையாக நிற்கின்றது. 

மூன்று தசாப்த காலமாக நீடித்த உள்நாட்டுப் போரின் போது தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் மிதவாத அரசியல் போக்கு குன்றிப் போயிருந்த சூழ்நிலையில், தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வருவதில் அவர்கள் ஆற்றிய பணியும், பங்கும் மகத்தானது. 

அரசியல் தலைமைத்துவங்களினால் செய்ய முடியாமல் போன சில காரியங்களைக்கூடத் தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களுக்கு நேரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் செய்திருக்கின்றார்கள். 

பலர் பத்திரிகைத் தொழிலைக் கடைப்பிடிக்கப் போய் உயிர்த்தியாகங்களையுஞ் செய்திருக்கின்றார்கள் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. 

வேறு பலர் நாட்டை விட்டகன்று அஞ்ஞாதவாசம் வாழ்கின்றார்கள் என்பதும் உண்மை. 

இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியலும் சமூக வாழ்வும் பெரும் இடர்பாடுகளுக்குள் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்ற தேசிய தமிழ்ப் பத்திரிகைகள் இதுகாலவரையில் செய்திருக்கக் கூடிய பணிகளுக்கு மேலதிகமாகப் பயனுறுதி உடைய கூடுதல் பணிகளை ஆற்ற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றன ”என்று தெரிவித்துள்ளார்.

ad

ad