புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

இலங்கையில் துஷ்பிரயோகங்கள் நீடிக்கின்றன: புதிய குற்றச்சாட்டு
நன்றி  பி.பி.சி 
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகும் சூழ்நிலையிலும், அங்கே மோசாமான மனித உரிமை மீறல்களும், சித்ரவதைகளும், துஷ்பிரயோகங்களும், பாலியல் தாக்குதல்களும் தொடர்ந்து நடப்பதாக பிரிட்டனில் இருந்து இயங்கும் மனித உரிமை அமைப்பொன்று குற்றம்சாட்டியுள்ளது.
பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தவர்கள் சிலர், ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு திரும்பி வந்த பின்னர் அளித்திருந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் ஃபவுண்டேஷன் ஃபார் ஹியுமன் ரைட்ஸ் அமைப்பு இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணிகள் அமைப்பின் அணுசரணையில் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக இந்த அறிக்கையை உருவாக்கிய விசாரணைக் குழுவின் தலைவரும், இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐநா. தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினராக இருந்தவருமான, மனித உரிமைகள் ஆர்வலர் யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
9 சட்டத்தரணிகள் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் 40 பேரிடம் இருந்து வாக்குமூலங்களைப் பெற்று இந்த அறிக்கையை உருவாக்கியதாக அவர் கூறினார்.
சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படுதல், தடுத்துவைக்கப்படுதல், கொடூரமான சித்ரவதைகள் மற்றும் பாலியல் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்படுதல் போன்றவற்றுக்கு தாம் ஆளான நேர்ந்ததாக இந்த விசாரணை குழுவிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் தடுப்புக் காவலில் இருந்து வெளியேறி ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள் மீண்டும் திரும்பிவந்தவர்களையே தாங்கள் விசாரித்திருந்ததாக யாஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
வாக்குமூலங்களில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களை நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் என்றே தாங்கள் குறிப்பிடுவதாகவும், ஏனென்றால் இந்தக் குற்றச்சாட்டுகள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றும், இலங்கை அரசாங்கமும் இது தொடர்பான விசாரணைகளை இதுவரை நடத்தியிருக்கவில்லை என்றும் யாஸ்மின் சூக்கா குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் மனித உரிமை ஆணையத்தின் ஊடாக தமது அறிக்கையினை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், இலங்கை அரசாங்கத்தின் பதில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இப்படியான கொடுமைகள் எல்லாம் முடிவுக்கு வந்தால்தான், அந்நாட்டில் சமாதானம் மலருமென்று தாம் நம்புவதாக இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் ஐநா தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவரும், தற்போது ஃபவுண்டேஷன் ஃபார் ஹியுமன் ரைட்ஸ் அறக்கட்டளைக்காக இலங்கை சம்பந்தமாக ஆய்வு செய்த குழுவுக்கு தலைமை ஏற்றிருந்தவருப்பவருமான யாஸ்மின் சூக்கா கூறினார்.
இராணுவம் மறுப்புமனித உரிமைகள் ஆர்வலர் யாஸ்மின் சூக்கா பிபிசியிடம் தெரிவித்த இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாமே அடிப்படயற்ற குற்றச்சாட்டுக்கள் என்று இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பிபிசியிடம் மறுத்தார்.
"இலங்கை தொடர்பான யாஸ்மின் சூக்காவின் அறிக்கைகள் எல்லாமே இலங்கை அரசுக்கு எதிரானவை, பக்கச்சார்பானவை. நாட்டுக்கு வெளியே செயற்படும் பிரிவினைவாதிகள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் நிதி திரட்டி அதன் துணையோடு, அவர்கள் கூறும் தனி ஈழம் என்கிற இலக்கை அடைவதற்கு பக்கசார்பான யாஸ்மின் சூக்கா போன்ற நபர்கள் செயற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் எதற்குமே உரிய நியாயமான ஏற்கத்தக்க ஆதாரங்கள் எவையுமே இல்லை." என இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

ad

ad