அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இந்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
இதனால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்துக்கு முன்பாக, எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்தவாரம் சிறப்புப் பாதுகாப்புக் கோரப்பட்டுள்ளதா என்று அமெரிக்கத் தூதரக ஊடக தகவல் அதிகாரி ஜுலியானா ஸ்பவனிடம் கேட்ட போது, “பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா காவல்துறை ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தூதரகப் பாதுகாப்புக்கு சிறிலங்கா காவல்துறையின் உதவி நாடப்படுவது வழக்கமான நடைமுறையே என்றும், அவர் கூறியுள்ளார்.
கடந்தவாரம் அமெரிக்காவுக்கு எதிரான மூன்று போராட்டங்கள் கொழும்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. |