தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி!
Posted by ranjan on March 23rd, 2014
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர்
இயக்கத்தினர் பெண்கள் பேரணி நடத்தினர்.இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழத்திற்கு ஆதரவாகவும் பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி அவர்கள் கையெழுத்து பரப்புரையை மேற்கொண்டனர்.
தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை உடனே நடத்து, அயோக்கிய அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்பது உள்ளிட்ட இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். காணாமல் போன தன் அண்ணனைமீட்பதற்காக தொடர்ச்சியாக போராடி வந்த சிறுமி விபூஷிகா இலங்கை அரசால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அவர்கள் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்தை எரித்தும், அமெரிக்க பொருட்களை சாலையில் கொட்டி உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டங்களில் கலந்துக்கொண்ட பெண்கள் தெரிவித்ததாவது…
தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து, குறிப்பாக தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் சித்தரவதைகளை மற்றும் படுகொலைகளை மறைத்து, தமிழர்களுக்கு ஞாயமான முறையில் கிடைத்திருக்க வேண்டிய நீதியை மறுத்து ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் அமெரிக்க ”அயோக்கிய” தீர்மானத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இலங்கை அரசுக்கு எதிரானது என்ற பெயரில் வெறும் ”உள்நாட்டு” விசாரணையை கோரும் தமிழீழ விடுதலைக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான இந்த அயோக்கிய தீர்மானத்தை தொடர்ந்து எதிர்ப்போம், எரிப்போம் என்றவர்கள் தெரிவித்தனர்.