புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது!
மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.
பொருளாதார மேதை என்று அறியப்படும் ப.சிதம்பரம் 30 ஆண்டுகளில் எட்டு முறை சிவகங்கை எம்.பி-யாக இருந்தவர். ஏதோ ஒரு காரணத்துக்காக தனது இடத்தை தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார் அவர். இப்போது மகனை ஜெயிக்க வைக்கவும்
படாதபாடு பட்டுவருகிறார்.

கடந்த  23-ம் தேதி அன்று காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் கிராமத்துக்கு பிரசாரத்துக்கு சென்றார் சிதம்பரம். அந்த கிராமத்தில் கூட்டம் குறைவாகவே இருந்ததால் சிதம்பரத்தின் முகம் இறுகியது. அதனைப் பெரிது படுத்தாமல் பிரசாரத்தைத் தொடங்கினார். ''சிவகங்கை நன்றி விகடன் தொகுதியில் இருந்து 30 ஆண்டுகள், எட்டு முறை என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது நீங்கள்தான்! இந்தத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் பல முக்கியத் துறைகளை நான் நிர்வாகம் செய்துள்ளேன். அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்தத் தொகுதிக்கு என்ன செய்துள்ளேன் என்று கேட்கிறார்கள். இந்த சிறிய கிராமத்தில்கூட வங்கிக் கிளைகள் திறந்து அதன் மூலம் பலர் கடன் பெற்றுள்ளனர். கல்விக் கடன் பெற்று பல மாணவர்கள் இன்று உயர் கல்வி பயில்கின்றனர். இந்தக் கல்வி கடன் பெற்ற மாணவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள் தந்தை கூலியாகவோ, விவசாயியாகவோ, துணி வெளுப்பவராகவோ இருக்கிறார்கள். மொத்தத்தில் சாமானிய மக்களின் குழந்தைகள் கல்விக் கடன் பெற்றுள்ளனர். அதேபோல் இந்தப் பகுதியில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் கொண்டுவந்துள்ளோம். மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மையம் கொண்டுவந்துள்ளோம். 100 நாட்கள் வேலைத் திட்டம் மூலம் பலர் பயன் அடைந்துள்ளனர். ஆனால், அதில் கூலி குறைவாகக் கிடைக்கக் காரணம் தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும்தான்!'' என்று தமிழக அரசைத் தாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார். அந்தப் பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு இருப்பதால், கூட்டமாக அவர்கள் அங்கு வந்துவிட்டனர். பாதுகாப்பு வளையத்தை மீறி  நரிக்குறவப் பெண்கள் தங்கள் குழந்தைளைத் தூக்கிக்கொண்டு சிதம்பரத்தைச் சுற்றி நின்று, ''உங்களோட ஒரு போட்டோ புடிச்சுக்குறோம் சாமீ...'' என்று சொல்ல... சிதம்பரமும், கார்த்தியும் சேர்ந்து புன்னகையுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர். அங்கு கூட்டம் சற்று அதிகமாக இருக்க, மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார் சிதம்பரம்.
''இந்தத் தேர்தலில் நான் ஒரு இளைய வேட்பாளரான கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்குகள் கேட்டு  வந்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொகுதியில் 74 வங்கிக் கிளைகள் திறந்து வைத்துள்ளேன். இந்த ஊராட்சிக்கு மட்டும் ஐந்து சமுதாயக் கூடங்கள் கட்டித்தந்துள்ளேன். நான் நிதி அமைச்சராக இருந்தபோதுதான் 100 நாட்கள் வேலைத் திட்டத்தை கொண்டுவந்தேன். இந்தியாவில் வறுமை, ஏழ்மை இல்லை என்று கூறவில்லை. ஆனால் பசி இல்லை. அதற்குக் காரணம் இந்த 100 நாள் வேலைத் திட்டம்தான். காங்கிரஸ் கட்சி அல்லாத ஒரு அரசு அமைந்தால் இந்த 100 நாள் வேலைத் திட்டம் செயல்படும் என்று கூற முடியாது. மோடி தனது பிரசாரத்தில் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளாரா... இல்லையே!
காங்கிரஸ் கட்சியில் இளைய தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளார் இளம் தலைவர் ராகுல். இந்தியாவில் இருக்கும் 121 கோடி மக்களில் 83 கோடி பேர் இளைஞர்கள். அப்படி இருக்கும்போது இளைஞர்கள் அரசியலில் பங்களிப்பு இருக்க வேண்டாமா? உலக நாடுகள் பலவற்றில் இளைஞர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றனர். நமது நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி செய்கின்றனர். அதனால்தான் இளைஞர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என்று ராகுல் விரும்பினார். நானும் விரும்பினேன். சொன்னால் மட்டும் போதாது; செய்து காட்ட வேண்டும் என்பதால்தான் நான் ஒதுங்கிக்கொண்டு கார்த்திக்கு வழிவிட்டுள்ளேன். 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்று கிராமத்தில் சொல்வார்களே, அதேபோல் கார்த்திக்கு நீங்கள் ஒரு வாக்களித்தால் அது இரண்டு வாக்கு அளித்தற்கு சமம். டெல்லிக்கு உங்கள் பிரதிநிதியாக கார்த்தி செல்வார். இங்கே உங்களோடு இருந்து உங்களுக்காகப் பணியாற்ற நான் இருப்பேன்' என்று பேசினார்.
கார்த்தியை ஆதரித்துப் பேச ராகுலை அழைத்து வரும் திட்டத்தில் இருக்கிறார் ப.சிதம்பரம். பி.ஜே.பி. வேட்பாளரான ஹெச்.ராஜாவை ஆதரித்துப் பேச நரேந்திர மோடி வர இருக்கிறார்.
சபாஷ் சரியான போட்டி!
-அபுதாஹிர்

ad

ad