உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 34 பேர் பலி
ஸ்லோவியன்ஸ்கில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையொன்றில் குறைந்தது 34 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு உக்கிர போரொன்று ஏற்படுவதற்கான சூழ்நிலை காணப்படுவதாகவும் அந்த பிராந்தியத்திலுள்ள பிரதான விமான நிலையமொன்று மூடப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரேனில் சிவில் யுத்தம் ஒன்று இடம்பெறுவதற்கான அபாயம் நிலவுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலண்ட் எச்சரித்துள்ளார்.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், முன்னாள் சோவியத் அயல் நாடான உக்ரேனின் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்ள தனது படையினருக்கு எச்சமயமும் உத்தரவிடலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
ஸ்லோவியன்ஸ்க் நகரில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ஆதரவாளர்களிடையே நன்கு பயிற்சி பெற்ற 800க்கு மேற்பட்ட போராளிகள் மறைந்துள்ளதாக உக்ரேனிய உள்துறை அமைச்சர் அர்ஸென் அவகோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிலுள்ள பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருவதாக உக்ரேனிய அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கிழக்கு உக்ரேனிலான பதற்றநிலை உச்ச கட்டத்தை அடைவதற்கு முன்னர் அதனை தணிவிக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஐரோப்பிய வெளிநாட்டு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்தனர்.