புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

தேநீர்க்கடையில் இருந்து பிரதமர் நாற்காலி வரை - மோடி கடந்த பாதை 
news
ரீக்கடையில் வேலை செய்தவரா, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு வருவது? என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அந்த ஒற்றை அஸ்திரத்தை ஒவ்வொரு மேடையிலும் பிரயோகித்து, மக்களின் அன்பையும், அனுதாபத்தையும், ஆதரவையும் அவர் வாக்குகளாக அறுவடை செய்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி விரைவில் பதவி ஏற்கவுள்ளார்.
 
தன்னம்பிக்கை, மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தே தீருவது என்ற மோடியின் விடாமுயற்சி, கை மீது மட்டுமல்ல, கை நிறையவும் பெரும்பலனை தேர்தல் முடிவுகளாக ஈட்டித் தந்துள்ளது.
 
காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் உள்ளது வாட்நகர் என்ற சின்னஞ்சிறு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி தாமோதரதாஸ் மூல்சந்த் மோடி-ஹீராபென் தம்பதியின் 6 பிள்ளைகளில் 3-வது பிள்ளையாக 17-9-1950 அன்று பிறந்தவர் நரேந்திர மோடி.
 
'உழைத்தால்தான் சோறு" என்ற நிலைமை இருந்ததால், அந்த குடும்பத்தில் எல்லோரும் உழைத்தனர். ஆரம்ப காலத்தில் ரயில் நிலையத்தில் ரீக்கடை வைத்திருந்த தனது தந்தைக்கு மோடி உதவினார். ரயில் நிலையத்திலும், ரயில்களிலும் ரீ விற்றார். பள்ளி பருவத்தில் அங்குள்ள பஸ் நிலையத்தில் அவரது அண்ணா நடத்தி வந்த ரீக்கடையில் வேலை பார்த்தார். அதோடு பள்ளி படிப்பையும் தொடர்ந்தார்.
 
படிப்பில் ஒரு சராசரி மாணவராகவே இருந்தார். பள்ளிப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டார். குஜராத் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. அரசியல் பொருளாதாரம் படித்தார். அப்போது ஆர்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அவருக்கு பிரசாரகர் பதவி கொடுத்தனர். அந்த பதவியில் திறம்பட செயலாற்றினார்.
 
நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மாநாட்டில் அவரது பணியை மூத்த தலைவர்கள் பாராட்டினார்கள். தொடர்ந்து சங் பரிவார் அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டதால் அகிலபார வித்யார்த்தி பரிசத் அமைப்பில் முக்கியமான பொறுப்புகளை வகித்தார்.
 
இந்திராகாந்தி நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியபோது அதை எதிர்த்து பிரசாரம் செய்தார். வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது ஜனசங்க தலைவர்கள் வசந்த் கஜேந்தர கட்கார், நாதலால் ஷட்கா ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மூலம் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.
 
எம்.ஏ. பட்டப்படிப்பு முடித்ததும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் பாரதீய ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை நடத்தினார். குஜராத் மாநிலத்தில் அந்த யாத்திரைக்கு முழு பொறுப்பையும் ஏற்று வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.
 
1995-ல் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்கு நரேந்திரமோடி முக்கிய பங்கு வகித்தார். இதனால் கட்சியில் செல்வாக்கு அதிகரித்தது. குஜராத்தில் இருந்து டெல்லி சென்று அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார். அவரது வேகமான அரசியல் பணியை பார்த்து அரியானா, இமாச்சல பிரதேச மாநில கட்சி பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
1998-ல் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது குஜராத் தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வில் நரேந்திர மோடி முக்கிய பங்காற்றினார். 
 
கேசுபாய் படேல் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். ஆனால், கேசுபாய் படேல் மீது ஊழல் குற்றச்சாட்டும், திறமையில்லாத முதல்வர் என்றும் புகார்கள் குவிந்தன. 2001-ல் மிகப்பெரிய பூகம்பத்தை குஜராத் சந்தித்தது. அப்போது மறுசீரமைப்பு பணியை கேசுபாய் படேல் சரிவர செய்யவில்லை என்று மாநிலம் முழுவதும் மக்கள் கொந்தளித்தனர்.
 
அவரை முதல் மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சியினர் போர்க்கொடி தூக்கினார்கள். கேசுபாய் படேலை மாற்ற கட்சி மேலிடம் முடிவு செய்தது. அடுத்த முதல்வராக நரேந்திர மோடியை நியமிக்க பலர் கருத்து தெரிவித்த நிலையில் மோடி முதல்வரானார்.
 
அடுத்த ஆண்டே சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல் மந்திரி ஆனார். தொடர்ந்து 4 முறை வெற்றி வாகை சூடி யாராலும் வீழ்த்த முடியாத முதல் மந்திரியாக திகழ்ந்தார்.
 
இந்த தொடர் வெற்றிக்கு காரணம், குஜராத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதுதான். விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தினார். நிபுணர்களை அழைத்து அவர்களின் ஆலோசனைப்படி நீர் மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தினார். ஏரி, குளம் உள்பட நிலத்தடி நீரை சேமிக்க 5 லட்சம் கட்டுமானங்களை உருவாக்கினார்.
 
இதேவேளை, 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
 
2014 - பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதற்கு, குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிதான் சரியானவர் என்ற கருத்து பா.ஜனதாவில் உருவானது. இதனால் மெல்ல மெல்ல அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற கருத்தும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடையே வலுப்பெற்றது.
 
எப்போது கட்சியால், பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரோ? அப்போதே நரேந்திர மோடி தனது தேசிய பயணத்தை தொடங்கிவிட்டார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே பெரும்பாலான மாநிலங்களில் அவர் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சூறாவளியாக சுழன்றார். தனது கர்ஜனை பிரசாரத்தால் எதிர்க்கட்சிகளை கதி கலங்கவைத்தார்.
 
“எனக்கு மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை மாதிரியாக கொண்டு நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வேன். ஊழலற்ற ஆட்சியை தருவேன்". என்ற மோடியின் கோஷம் தேசத்தையே ஈர்த்தது.
 
16-வது பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுவிட்டது. எதிர்க்கட்சிகள் இதற்கு முன் எப்போதும் பெறாத வெற்றியை இந்த தேர்தலில் பா.ஜனதா நிகழ்த்தி காண்பித்து உள்ளது.
 
இதற்கு மிக முக்கியமான காரணம், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=777063014417382934#sthash.nEKLiPBN.dpuf

ad

ad