இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களைக் கையாளும் மூத்த அதிகாரியான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் அம்மையார் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு விசேட ஹெலிக்கெப்டர் மூலம் விஜயம் செய்துள்ளார்.
அவருடன் வெளிவிவகார அமைச்சின் பிரதிச் செயலாளர் விஸ்வேஷ் நேம்கியும் மற்றொரு கீழ்நிலை அதிகாரியும் சென்றுள்ளனர்.
நாளை வரை இக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சு அமைந்துள்ள 'சவுத் புளொக்' அலுவலகத்தில் இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்குப் பொறுப்பான அதிகாரியாக அமைச்சின் இணைச் செயலாளர் சுஜித்ரா துரை அம்மையாரும் விஸ்வேஷ் நேம்கியும் அண்மையில் பதவியேற்றனர்.
தற்போது இலங்கை நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இக்குழுவினர் இன்று காலை ஹெலிக்கொப்டரில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தனர்.
இன்று காலையில் கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதியில் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளை அவர் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளிப்பார்.
அதன் பின்னர் அவர்கள் நண்பகல் 11.30 மணியளவில் ஆளுநர் ஜெனரல் சந்திரசிறியையும், பிற்பகல் 2.30 மணிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பர் எனக் கூறப்பட்டது.
இன்று மாலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்துப் பேசுவர் எனத் தெரியவருகிறது.