ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: கண்டனம் தெரிவித்து கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் தலைவர் சி.இராசன் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் வருகிற 26-ஆம் தேதி பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க ராஜபக்சேவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து பெங்களூரு டவுன் ஹால் எதிரே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் தமிழர்கள், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.