உள்ளகப் பொறிமுறைப் பொறிக்குள் வீழ்த்தப்படும் இலங்கை அரசு
இலங்கையில் போரின் போது நடந்த மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஜெனீவாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு ஊக்கமளிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா தயாரான போது, அதற்கு உற்சாகம் கொடுக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
அது சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம்.
அதையடுத்து, இலங்கை அரசாங்கத்தின் முயற்சியினால், இன்னொரு தீர்மானமும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர் பஸில் ராஜபக்சவும், வொஷிங்டனில் இருக்கும், இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவும் இணைந்து மேற்கொண்ட முயற்சியினால் தான், இந்த இரண்டாவது தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்த 364வது இலக்கத் தீர்மானம், மனித உரிமைகள், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அமெரிக்காவினது பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், இலங்கை தொடர்பான கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைக் கோருகிறது.
அத்துடன் “உள்நாட்டுப் போரின் போது, இருதரப்பினதும் நடவடிக்கைகளால், ஏற்பட்ட மனக்குறைகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கித் தீர்வுகாண சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா, உதவ வேண்டும்.
தென்னாபிரிக்கா போன்று உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க இலங்கையை ஊக்குவிக்க வேண்டும்.
மத மற்றும் ஊடக சுதந்திரத்தை இலங் கை உறுதிப்படுத்தி, ஊடகவியலாளர்கள் மற்றும் மத தலங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்றெல்லாம் இந்த தீர்மானம் கோருகிறது.
சாதாரணமாக இதனை இலங்கை அரசுக்கு ஆதரவான தீர்மானம் என்று கூற முனைந்தாலும், ஒரு வகையில் இதுவும் கூட இலங்கை அரசாங்கத்துக்கான ஒரு பொறி தான் என்பதை நுணுக்கமாகப் பார்க்கும் போது புரிந்துகொள்ள முடியும்.
ஆரம்பத்தில் இந்த தீர்மானத்துக்கு 11 உறுப்பினர்களே ஆதரவளித்திருந்தனர். ஆனால், கடந்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. இம்மாதம் முதலாம் திகதி மேலும் ஒன்பது செனட்டர்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்து, தற்போது 26 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்தத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, முன்வைக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்கு ஆதரவான தீர்மானமும் தற்போது, வெளிவிவகாரக் குழுவின் பரிசீலனையிலேயே உள்ளது. ஆனால், அந்த தீர்மானத்துக்கு புதிதாக ஆதரவு கிடைக்கவில்லை.
உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவு தேடும் வகையில், இலங்கை அரசாங்கத்தின் தூண்டுதலால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, அதிகரித்து வரும் ஆதரவு குறித்து ஆங்கில ஊடகங்களில் முழுப்பக்க விளம்பரங்கள் எல்லாம் வெளியாவதைக் காணமுடிகிறது.
இந்தத் தீர்மானம், வெளிவிவகாரக் குழுவினால், நாடாளுமன்ற விவாதத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு 54 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க காங்கிரஸின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்கக் கோரும் இந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு முற்றிலும் சார்பானது என்று கூறமுடியாது. அதிலுள்ள ஒரே சார்பான விடயம், உள்ளக விசாரணைக்கு உதவ வேண்டும் என்பது மட்டும் தான். அதுவும் கூட எந்தளவுக்கு இலங்கை அரசுக்கு கைகொடுக்கத்தக்கது என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால், சர்வதேச விசாரணை என்ற அமெரிக்க அரசின் முயற்சியை பலவீனப்படுத்துவதற்காகவே, உள்ளக விசாரணை என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் பின்புல ஆதரவை வழங்கியது.
ஜெனீவாவில் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கு, அதிகாரம ளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், இப்போது இலங்கை அரசாங்கம் இரண்டு விடயங்களுக்குத் தயாராக இல்லை. முதலாவது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகள் ஏதும் நடத்தத் தேவையில் லை என்பது இரண்டாவது.
ஜெனீவா தீர்மானத்தின் போது, நடுநிலை வகித்த சில நாடுகள் இந்த இரண்டையும் வலியுறுத்துவதாகத் தகவல்கள் கூறுகின்றன. தென்னாபிரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இவற்றில் முக்கியமானவை. இந்த இரண்டையும் நிறைவேற்றுவதன் மூலமே சர்வதேச அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று, இந்த நாடுகள் ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இலங்கை அரசாங்கமோ இந்த இரண்டுக்கும் தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிவிட்டார்.
அதேவேளை, அமெரிக்க காங்கிரஸில், உள்ளக விசாரணைகளை வலியுறுத்தி, கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்குப் பின்புலத்தில் இருந்த இலங்கை அரசாங்கம், இப்போது சுதந்திரமான உள்ளக விசாரணைகளை நடத்தவும் தயாராக இல்லை.
ஆரம்பத்தில் இருந்தே, அரசாங்கம் எந்தப் போர்க்குற்றங்களோ, மீறல்களோ நிகழவில்லை என்று கூறிவந்துள்ளது. அதைவிட, ஏற்கனவே இராணுவ நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், அதுவே போதும் என்று அரச உயர்மட்டம் கருதுவதாகக் கூறப்படுகிறது.
மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான இந்த இராணுவ நீதிமன்றம், முதற்கட்டமாக, படையினர் திட்ட மிட்ட வகையில் பொதுமக்களைத் தாக்கவில்லை, என்று அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தது.
இரண்டாவது கட்டமாக, சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக அறிவித்து ஒன்றரை ஆண்டுகளாக அந்த விசாரணைகள் நீள்கின்றன. ஆனால், இரண்டாவது கட்ட அறிக்கையை அந்த இராணுவ நீதிமன்றம் இன்னமும் கையளிக்கவேயில்லை.
அதற்கிடையில், இந்த இராணுவ நீதிமன்றத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை, அடுத்தமாதம் வெளிநாடு ஒன்றில் இராஜதந்திரப் பதவிக்கு அமர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, இந்த அறிக்கை கையளிக்கப்படுமா அல்லது அது அப்படியே மறக்கப்பட்டு விடுமா என்றும் தெரியவில்லை.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட இலங்கை அரசுக்கான அமெரிக்காவின் அழுத்தங்கள் குறையப் போவதில்லை.
ஏனென்றால், உள்ளக விசாரணை தவிர, மற்றெல்லா விடயங்களிலும், தற்போதைய அரசு கொண்டுள்ள அணுகுமுறையையே அந்த தீர்மானமும் வலியுறுத்துகிறது.
எனவே, அமெரிக்க காங்கிரஸில் இந்த தீர்மானம் வலுப்பெற்று வருவது கூட இலங்கைக்கு பொறியாகவே அமையுமே தவிர பலமாக இருக்காது.
சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதை என்று கூறுப்படுமே, அது போலத்தான் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும், சிக்கிக் கொள்ளலாம்.
கபில்