த வி கூட்டணி பெரும்புள்ளி முகுந்தன் யாழ் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியின் முக்கியஸ்தர் தங்க முகுந்தன் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிக் காரியாலயத்திலிருந்து தனது மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தான் கட்சியின் சகலவிதமான அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவுள்ளதாக முகுந்தன் தெரிவித்தார்.
அந்தளவிற்கு தழிழ் அரசியல் கீழ்த்தரமடைந்துள்ளதாகவும், எந்தவொரு தமிழ் அரசியல்வாதியுமே தம்மை நம்பியிருக்கும் தமிழ் மக்களுக்காக உண்மையாக நடப்பதில்லை எனவும், மக்கள் நலனை விடவும் தமிழ் அரசியல்வாதிகளிடம் தாம் சார்ந்த சுயநலமே மேலோங்கிக் காணப்படுவதாகவும் முகுந்தன் தெரிவித்தார்.
தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர் இல்லை என ஆனந்தசங்கரி கூறியதை தான் நிராகரிப்பதாகவும் கடந்த 25 வருட காலமாக இக்கட்சிக்காக தான் பாடுபட்டுழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கான ஆதாரங்களைத் தான் வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.