முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த சிங்கப்பூர் ஆர்வம்
புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 40 பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் ஆர்வத்தை வெளியிட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளரின் பணியகம் தெரிவித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க தேசிய செயற்திட்டத்தின் கீழ் தற்போது 132 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு தற்போது புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர் 12 ஆயிரம் புலிப் போராளிகள் சரணடைந்ததாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக்க தெரிவித்தார்.
132 முன்னாள் புலிப் போராளிகளுக்கு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் ஒரு வருடகால புனர்வாழ்வு பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
புனர்வாழ்வு பயிற்சிகளை பெறும் போராளிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக பார்வையிட்டு வருவதுடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சந்தித்து வருகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்தவர்கள் விடுவிக்கப்பட்டு வருவதுடன் ஜூன் மாதம் மற்றுமொரு தொகுதியினர் விடுவிக்கப்பட உள்ளனர்.
புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டவர்களில் 230 பேர் உயர்கல்வி தகுதிகளை பெற்றுள்ளதுடன் 35 பேர் பல்கலைக்கழங்கங்களில் பயின்று வருகின்றனர் எனவும் விஜேதிலக்க குறிப்பிட்டுள்ளார்.