சென்னையில் சிறுமியை திருமணம் செய்த இட்லி கடைக்காரர் கைது
சென்னை கோயம்பேட்டில் சிறுமியை திருமணம் செய்த இட்லி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேடு திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (30). சங்கரின் மனைவி மகாலட்சுமி (25). சங்கர், கோயம்பேட்டில் நடைபாதையில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சங்கரும் காதலித்து வந்தனராம். இது தெரிந்த மகாலட்சுமி, தனது கணவர் சங்கரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சங்கர், தனது போக்கை மாற்றிக் கொள்ளாததால் மகாலட்சுமி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் சங்கரை அழைத்து எச்சரித்து அனுப்பினராம்.
இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு சங்கர், அந்த 17 வயது சிறுமியை ரகசியமாக ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கு அந்த சிறுமியின் தாயார் அமுதா, சகோதரர் பிரபு, சங்கரின் சகோதரி சரோஜா ஆகியோர் துணையாக இருந்தனராம்.
இது தெரிந்த மகாலட்சுமி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸôர் சங்கர், அமுதா, பிரபு ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் சரோஜாவை போலீஸார் தேடி வருகின்றனர்