இலங்கைத் தமிழர் விவகாரம் உள்நாட்டு விடயமாகும்!- பி.ரி.ஐ செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி ஷாரி
இலங்கைத் தமிழர் விவகாரம் உள்நாட்டு விடயமாகும். இந்த விவகாரம் சர்வதேச மயப்படுத்தப்படக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் வெளியுறவுக் கொள்கைக்கான ஏற்பாட்டாளருமான சேஷாத்ரி ஷாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்திய வர்த்தக வாணிப நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாயின் தமிழர் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கையிடம் எடுத்துக்கூறியுள்ளதாக சேஷாத்திரி சாரி தெரிவித்தாக பி.ரி.ஐ. செய்தி ஸ்தாபனம் சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அனுப்பிவைத்துள்ள விளக்க அறிக்கையிலேயே சேஷாத்ரி சாரி மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளாதாவது:
தமிழர் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டாலே இலங்கை இந்திய வர்த்தக வாணிப நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை காணமுடியும் என்று நான் தெரிவித்ததாக வெளியான செய்தி தவாறானது. சிங்கப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் இவ்வாறு நான் எந்தக் கருத்ததையும் தெரிவித்திருக்கவில்லை.
நான் கடந்த 20ம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கொழும்புக்கு விஜயம் செய்திருந்த போது அங்கு இடம்பெற்ற கருத்தரங்கு மற்றும் நேர்காணல்களில் இலங்கை, இந்திய உறவு தொடர்பில் எனது நிலைப்பாட்டினை விளக்கியிருந்தேன்.
இலங்கை தமிழர் விவகாரமானது உள்நாட்டு விடயமாகும். இதனை சர்வதேச மயப்படுத்துவது கூடாது, இலங்கையின் வர்த்தக வாணிப செயற்பாடு தொடர்பில் உயர்ந்த எண்ணத்தையே நாம் கொண்டுள்ளோம்.
இரு தரப்பு வர்த்தக வாணிப நடவடிக்கைளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாயின், தமிழர் விகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று நாம் கூறியதாக வெளியிடப்பட்ட செய்தி தவறானது மட்டுமல்ல, வெறுப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
அத்துடன் இலங்கை இந்திய உறவு தொடர்பான எனது நிலைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது என்றார்.