ஐ.நா விசாரணை குழுவிற்கு இந்தியாவும் கதவடைப்பு
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் மூன்று விசேட நிபுணர்களும் 13 உறுப்பினர்களையும் கொண்ட குழுவுக்கு இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளே இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அக்குழுவினர் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த போது இந்தியா அவர்களிற்கு வீஸா வழங்க மறுத்துள்ளது.
இதனையடுத்து குறித்த குழுவினர் தென்னாசியாவிற்கு அப்பால் உள்ள நாடுகளில் இருந்தே இலங்கை தொடர்பான விசாரணையை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதற்கமைய தென்னாசியவிற்கப்பால் அமெரிக்காவின் நியூயோர்க் - சுவிட்சர்லாந்தின் ஜெனிவா- தாய்லாந்தின் பெங்கொக் ஆகிய நகரங்களிலிருந்து விசாரணைகளை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஐ.நா குழுவினர் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இக்குழுவினர் தொலைபேசி கென்பிரன்ஸ்- ஸ்கைப் ஆகியவற்றினூடாக இலங்கையில் விசாரணை நடத்த முயன்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.