மத்திய அரசின் அழுங்குப் பிடியை ஆட்டம் காணவைத்த தமிழ்நாடு-ஹரிகரன்
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில், மாநிலங்கள் தலையீடு செய்யவோ, அழுத்தங்களைக் கொடுக்கவோ முடியாது என்ற, பா.ஜ.க. அரசாங்கத்தின் அழுங்குப் பிடியை ஆரம்பத்திலேயே ஆட்டம் காண வைத்து விட்டது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் இந்த வெற்றிக்குக் காரணம், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு என்பது, ஒரு விசித்திரமான உண்மைதான்.
தமிழ்நாட்டுக்கும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கும் எந்தளவுக்கு எட்டாப் பொருத்தம் என்பதை இங்கு விபரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
இலங்கை அரசாங்கத்தை, தமிழ்நாடும், தமிழ்நாட்டை இலங்கை அரசும் எந்தளவுக்கு மோசமாக விமர்சிக்க முடியுமோ, அந்தளவுக்கு மோசமாக விமர்சித்து வந்த வரலாற்றை எவராலும் இலகுவில் மறக்க முடியாது.
இங்குள்ள தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இருந்து கொடுக்கப்படும் குரலை, இலங்கை அரசாங்கத்தினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதுபோலவே, இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதத்தை தமிழ்நாட்டினால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இதுவே இரு தரப்புக்கும் இடையிலான விரிசலின் அடிப்படை. இந்த விரிசலின் விளைவும், இலங்கைத் தமிழர் மீதான தமிழ்நாட்டின் கரிசனைகளும், புதுடில்லி மீதும் தாக்கத்தைச் செலுத்தியது.
குறிப்பாக, மன்மோகன் சிங் அரசாங்கத்தில் தி.மு.க. அங்கம் வகித்த போதும் சரி, அதிலிருந்து வெளியேறிய பின்னர் ஏற்பட்ட சூழலிலும் சரி, தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு புதுடில்லி வளைந்து கொடுக்கும் நிலை காணப்பட்டது உண்மை.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும், அவ்வாறு புதுடில்லி வளைந்து கொடுத்ததாகக் கூறமுடியாது.
குறிப்பாக, 2009ம் ஆண்டு போரை நிறுத்தும் விடயத்தில், புதுடில்லி மீது கொடுக்கப்பட்ட தி.மு.க.வின் அழுத்தங்கள் பயனளிக்கவில்லை.
அதுபோல, இலங்கையுடனான இராணுவ உறவுகளை முறித்துக் கொள்ளவும், பயிற்சிகளை நிறுத்திக் கொள்ளவும், தமிழ்நாட்டின் அழுத்தங்கள் அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை. போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளிலும், புதுடில்லியை தமிழ்நாட்டினால் வளைக்க முடியவில்லை.
என்றாலும், 2012, 2013ம் ஆண்டுகளில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்கச் செய்வதில் தமிழ்நாடு பெரும் வெற்றியைப் பெற்றது.
என்றாலும், 2013ம் ஆண்டு வாக்கெடுப்பில், இந்தியா நடுநிலை வகித்தது.
அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து முறையான அழுத்தங்கள் கொடுக்கப்படாததும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் இந்தியா ஆதரித்த போது, புதுடில்லியின் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும், இந்தியாவின் தேசியவாதிகள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.
காரணம், அது தவறான முடிவு என்றும், தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அப்போதைய அரசு அதிகம் வளைந்து கொடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
எந்தவொரு நாட்டையும் இலக்கு வைத்து, கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பதே இந்திய வெளிவிவகாரக் கொள்கை என்றும், அதனை புதுடில்லி மீறி விட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
2013ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, புதுடில்லி மீது தமிழ்நாட்டின் அழுத்தங்கள் அதிகமாக இருக்கவில்லையென்பதுடன், தமிழ்நாட்டுடன் பேரம் பேச வேண்டிய அவசியமும் மன்மோகன் சிங் அரசுக்கு இல்லா மல் போனது.
அரசியல் சூழலில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள், ஜெனீவாவில் இந்தியா தனது முடிவை எடுப்பதில் எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை.
இதனால், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது இந்தியா.
அதேவேளை, சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மான வாசகம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அதற்கு எதிராகவும் இந்தியா வாக்களித்தது. எந்தவொரு நாட்டையும் குறிவைத்துக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்பது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை என்று அதனை நியாயப்படுத்தியது புதுடில்லி.
ஆனால், அதே இந்திய வெளிவிவகார அமைச்சுதான், 2012, 2013ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்திருந்தது.
அதுமட்டுமன்றி, பாலஸ்தீனம் மீதான தாக்குதலில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள் ளதா என்று இஸ்ரேல் மீதான சர்வதேச விசார ணையைக் கோரும் தீர்மானத்தைக் கூட அண்மையில் இந்தியா ஆதரித்து வாக்களித்துள்ளது.
2012, 2013ல், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தடுமாறியதெனில், 2014ல் இஸ்ரேல் விவகாரத்திலும் அவ்வாறே தடுமாறியது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
எவ்வாறாயினும், இலங்கை விவகாரத்தில், புதுடில்லியின் முடிவுகள் மீது தமிழ்நாடு செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு, கடந்த மே மாதம், நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு கட்டியிருந்தது.
அந்த தேர்தலில் பா.ஜ.க. பெற்ற தனிப் பெரும்பான்மை பலம், மாநிலங்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்க வேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்து விட்டது.
மாநிலங்களின் தயவின்றி ஆட்சி செய்யும் ஓர் அரசாங்கம், தன்னிச்சையாகவே முடிவுகளை எடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில், தமிழ்நாடோ, மேற்கு வங்காளமோ தலையிட முடியாது என்று பா.ஜ.க. தரப்பினர் வெளிப்படையாகவே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும், மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. தலைவர்கள் யாரும், அதனை வெளிப்படையாகக் கூறியதாகத் தெரியவில்லை.
ஆனால், அவர்களை ஆட்டுவிக்கும் அல்லது ஆட்டுவிக்க முற்படும் பா.ஜ.க. கொள்கை வகுப்பாளர்கள், அந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கை விவகாரத்தில் தமிழ்நாடும், பங்களாதேஷ் விவகாரத்தில் மேற்கு வங்காளமும் தான், புதுடெல்லி மீது அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.
இந்த இரண்டு தரப்புகளையும் உதறித் தள்ளிவிட்டு, இருநாடுகளுடனும் உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பது, பா.ஜ.க. கொள்கை வகுப்பாளர்களினது கருத்தாகும்.
அண்மையில் கொழும்பில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த ஞாபகார்த்த கருத்தரங்கில் உரையாற்றிய, பா.ஜ.கவின் தற்போதைய தலைவர்களில் ஒருவரான, சுப்பிரமணியன் சுவாமி, இந்திய - இலங்கை உறவுகளிலிருந்து தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினையையும் துண்டிக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
இது பா.ஜ.க. தரப்பிலுள்ளவர்களின் மனோநிலையை தெளிவாகவே படம்பிடித்துக் காட்டியது.
இனிமேல், அதாவது நரேந்திர மோடி அரசாங்கம் பதவியில் இருக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளிலும், இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் மாநிலங்களின் தலையீடு இருக்காது என்றே கருதப்பட்டது.
அவ்வாறு தலையிடுவதற்கு அல்லது செல்வாக்குச் செலுத்துவதற்கு புதுடில்லி இடமளிக்காது என்பதற்கான சமிக்ஞைகளே வெளிப்பட்டன.
எனினும், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஒரு நடவடிக்கை, தமிழ்நாட்டின் கரிசனைகளுக்கும் கவலைகளுக்கும் காது கொடுக்க வேண்டிய நிலையை புதுடில்லிக்கு ஏற்படுத்திவிட்டது.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை தனியே, இலங்கை மீது அழுத்தங்களைக் கொண்டு வரவில்லை.
புதுடில்லிக்கும், அழுத்தங்களை ஏற்படுத்தி அதனைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.
கட்டுரை விவகாரம், தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது அதனை வேடிக்கை பார்த்த இந்திய அரசாங்கத்தினால், அந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்த போது, மௌனமாக இருக்க முடியவில்லை.
அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காக, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது பா.ஜ.க. அரசாங்கம்.
தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்குப் பணிந்து. அதன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு உள்ளாகியது.
பாதுகாப்பு அமைச்சு மன்னிப்புக் கோரிவிட்டது, அதனுடன் எல்லாம் முடிந்து போயிற்று என்று கூறி, இந்த விவகாரத்தில் அடிபணியாமல் இருந்திருக்க முடியும்.
ஆனால், பா.ஜ.க. அரசாங்கத்தினால் அவ்வாறிருக்க முடியவில்லை.
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று, புதுடில்லிக்கான இந்தியத் தூதுவரை அழைத்துக் கண்டித்துள்ளது.
இது, வெளிவிவகாரக் கொள்கையில், தலையிடும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை என்ற பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டுக்கு முரணானது.
இந்த முடிவை எடுத்ததன் மூலம், உணர்வுபூர்வமான பிரச்சினைகளில், மாநிலங்களின் கருத்துக்கு மத்திய அரசு செவிசாய்த்தேயாக வேண்டும் என்று உணர வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இனிமேல், இந்திய – இலங்கை உறவுகளுக்குக் குறுக்கே தமிழ்நாட்டினால் எதையும் செய்ய முடியாது என்ற, இலங்கை அரசாங்கத்தின் நினைப்பிலும், இது மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.
ஹரிகரன்