இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்ட பான் கீ மூன்
2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை
என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பிலேயே இந்த கூட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் அதற்கு இலங்கை இன்னும் உரிய பதிலை அளிக்கவில்லை என்று பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் இன்றைய நிகழ்வின்போது குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளுடன் உறவுகளை கொண்டுள்ள மனித உரிமை காப்பாளர்கள் தொடர்பில் சில வன்முறைகள் இடம்பெற்றதை இதன்போது பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார். 2013 ஆம் ஆண்டு தாம் இலங்கைக்கு சென்று திரும்பியபின்னர் அவருடன் தொடர்பை கொண்டிருந்தவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதனை முடிவுக்கு கொண்டு வர இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்திருந்தமையை பான் கீ மூன் சுட்டிக்காட்டினார். இதேவேளை மார்ச் 2014 அன்று இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கையில் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமை காப்பாளர்கள் இலங்கைக்கு அவப்பெயரை கொடுத்தார்கள் என்றும் அவர்கள் நல்லிணக்கத்துக்கு ஆபத்தை கொண்டு வருவதாகவும் கூறி இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆங்கில செய்தியில் அவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் என்பன காண்பிக்கப்பட்டுள்ளன என்று தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 27வது வது அமர்வின்போது அறிக்கையிடப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த ஆங்கில செய்தியில் சர்வதேச சமூகத்துக்கு தகவல்களை தருவோர் எனக் கூறப்படுவோர் நாட்டுக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வின் 27வது கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது இந்தநிலையில் குறித்த மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் பதிலை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.