ஈராக்–சிரியாவில் 31,500 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்: அமெரிக்க உளவுத்துறை தகவல்!!
ஈராக் மற்றும் சிரியாவில் 31,500 ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த இருநாடுகளிலும் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றி ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர்.
தங்கள் வசம் உள்ள பகுதிகளில் வாழும் இதர மதத்தினரை கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றி வருகின்றனர். மறுப்பவர்களை கொன்று குவிக்கின்றனர். அங்கிருந்து அவர்களை அடித்து விரட்டுகின்றனர். மேலும் அமெரிக்க நிருபர்கள் 2 பேரின் தலை துண்டித்து கொலை செய்து மிரட்டல் விடுத்துள்ளனர்.
மைனாரிட்டியாக வாழும் இதர மதத்தினரை காப்பாற்றவும், மிரட்டல் விடுக்கும் தீவிரவாதிகளை ஒடுக்கவும் அமெரிக்கா முடிவு செய்தது. ஈராக்கில் தீவிரவாதிகளின் பகுதிகளில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்தை தடுத்துள்ளனர்.
மேலும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீட்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் மே முதல் ஆகஸ்டு மாதம் வரை 10 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக அமெரிக்காவின் உளவு துறையான ‘சி.ஐ.ஏ.’ கணித்து அறிவித்தது.
தற்போது அது 20 ஆயிரமாக அதிகரித்து 31,500 ஆக உயர்ந்துள்ளது. எனவே இவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்காக ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிராவதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
தொடக்கத்தில் தீவிரவாதிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனவே ஜூன் மாதத்தில் இருந்து தங்கள் அமைப்பில் இளைஞர்கள் சேர்க்கையை தீவிராவதிகள் தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் வெற்றி பெற்றவர்கள் பல பகுதிகளை பிடித்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கினர்.
அதன் பிறகுதான் இந்த அமைப்பில் பலர் சேர்ந்தவர். அதனால்தான் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என சி.ஐ.ஏ. உளவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரியான் டிராபானி தெரிவித்துள்ளார்.
இந்த தீவிரவாத அமைப்பில் 80 நாடுகளை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். சிரியாவில் மட்டும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் உள்பட 15 ஆயிரம் பேர் உள்ளனர் என்றும் அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Share it now!