இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும்
திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து
உயர்மட்டக் குழு ஆராய்வு
ஆறுமுகம் திட்டத்தை கடுமையாக எதிர்த்துவருகின்ற நிலையில், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து உயர்மட்டக் குழு செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்தது.
வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் மாகாண விவசாய அமைச்சர் தலைமையில்
பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திட்ட நிதி
வழங்குநர்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு
அமைச்சு, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண கல்வி மற்றும் சுகாதார
அமைச்சர்களான குருகுலராஜா, சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் எடுத்துவரும்
திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து
வருகின்றனர். இதனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்துக்கு மாற்றீடாக கடல்நீரைக் குடிதண்ணீராக்கும்
திட்டத்துக்கு உதவுமாறு வட மாகாண சபை ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்
கோரியிருந்தது. இதன்பின்னர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை திட்டத்தை
மாற்றியமைத்து கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்ட அறிக்கையை வட மாகாண
சபையிடம் சமர்ப்பித்திருந்தது. இன்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில்
இத்திட்டத்துக்கு வடமாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஆதரவு
தெரிவித்தார். எனினும் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தில் இன்னும் சில
திருத்தங்கள் செய்யவேண்டி இருப்பதால் இம்மாத இறுதிக்கும் நீர்ப்பாசனத்
திணைக்களத்துக்கு வட மாகாண சபை தனது கருத்துக்களை அனுப்பிவைக்கும் என
இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடல் நீரைக்
குடிதண்ணீராக்கும் திட்டம் தொடர்பாக திட்டமிடுதல் மற்றும் செயற்படுத்தலில்
வட மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் பங்கேற்பை
உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு நீர் வழங்கல்
வடிகாலமைப்பு சபை இணக்கம் தெரிவித்தது