புதிய மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு கொடுத்துள்ள அதிர்ச்சி
ஐ.நா.
மனித உரிமை ஆணையாளராக கடந்த 4ம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட ஜோர்தான்
இளவரசர் சையிட் அல் ஹுசேன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய
முதல் உரையி லேயே, இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக்
கொடுத்திருக்கிறார்.
அவர் தனது உரையில் இலங்கை தொடர்பாகத் தெரிவித்த சில கருத்துகள் அரசாங்கத்தினால் உடன்படக் கூடியவையல்ல. முதலாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இரண்டாவது, மனித உரிமை ஆர்வலர்கள், சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
மூன்றாவது, முஸ்லிம் மற்றும், கிறிஸ்தவ மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
இவை தவிர, முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் செயல்முறைகளைப் பாராட்டி அவரது வழியையே தாமும் பின்பற்றப் போவதாகவும் தனது கன்னி உரையில் தெரிவித்திருந்தார் சையிட் அல் ஹுசேன்.
கடந்த ஆறு ஆண்டுகளாக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளைக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வந்தது.
நவநீதம்பிள்ளை பாரபட்சமாகவும், அநீதியாகவும் செயற்படுகிறார் என்பது இலங்கை அரசாங்கத்தின் நீண்டநாள் குற்றச்சாட்டு. இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களை விசாரிப்பதற்கான ஐ.நா.வின் எல்லா முயற்சிகளையுமே, கேலிக்கூத்து என்று காண்பிக்க முனைந்தது அரசாங்கம்.
இதன்மூலம் நவநீதம்பிள்ளை, அநீதியான முறையில், இலங்கையைத் தண்டிக்க முனைவதாக காட்ட அரசாங்கம் முனைந்திருந்தது.
அந்த முயற்சிகளெல்லாம் தோல்வியுற்று, இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தான் நவநீதம்பிள்ளை தனது பதவியிலிருந்து கடந்த மாத இறுதியுடன் ஓய்வு பெற்றிருந்தார்.
நவநீதம்பிள்ளைக்கு அடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட, ஜோர்தான் இளவரசர் சையிட் ராட் அல் ஹூசேன், மீது இலங்கை அரசாங்கம் முன்னர் அதிகமான நம்பிக்கையை வெளியிட்டிருந்தது.
நவநீதம்பிள்ளையைப் போல பக்கச்சார்புடன் செயற்படமாட்டார் என்றும், இலங்கை விவகாரத்தில் அவர் நியாயமாக நடந்து கொள்வார் என்றும், அரசாங்க அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
தற்போது, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்படும், இலங்கைக்கு எதிரான விசாரணைகள் விடயத்தில் நீக்குப் போக்குடன் செயற்படுவார் என்றே அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.
ஆனால், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய வழங்கப்பட்ட ஆணையின் படி உருவாக்கப்பட்ட ஒரு விசாரணைக் குழுவை, புதிய ஆணையாளராக ஒருபோதும் கலைத்து விடவோ, அதன் விசாரணைகளை நிறுத்தி வைக்கவோ முடியாது.
ஏற்கனவே இருந்த ஆணையாளர் தொடங்கிய விசாரணையை தொடர்ந்து நடத்தி முடிக்க வேண்டியது புதிய ஆணையாளரின் கடப்பாடு.
புதிய ஆணையாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவோ, கோத்தாபய ராஜபக்சவோ கூட இருந்தாலும் இதையே தான் செய்ய முடியும். செய்ய வேண்டும். ஏனென்றால், இது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணை.
அதனை நிறைவேற்ற வேண்டியது, மனித உரிமை ஆணையாளரின் கடப்பாடு. இதனைப் புரிந்து கொள்ளாமல் தான் அமைச்சர்கள் பலரும், புதிய ஆணையாளர் குறித்து நம்பிக்கை வெளியிட்டனர்.
இப்போது, என்னவென்றால், புதிய ஆணையாளர் சையிட் அல் ஹூசேன், தானும், நவநீதம்பிள்ளையின் வழியிலேயே செயற்படப் போவதாக தனது முதல் உரையிலேயே கூறியிருப்பது, இலங்கைக்குப் பேரதிர்ச்சியாகவே இருக்கும்.
ஏனென்றால், நவநீதம்பிள்ளையை பக்கச்சார்பானவர் என்று இலங்கை அரசாங்கம், கூறிய குற்றச்சாட்டுக்கு, அவர் ஒரு தமிழர் என்ற காரணத்தையும் முன் வைத்தது. ஆனால், சையிட் அல் ஹூசேன், அவ்வாறு குற்றஞ்சாட்டப்படுவதற்கு அவர் ஒரு தமிழர் அல்ல.
அதைவிட, இலங்கை விவகாரத்திலோ, தமிழர் பிரச்சினையிலோ இதற்கு முன் எந்தவகையிலும் தொடர்புபட்டவரும் அல்ல. எனவே, சையிட் அல் ஹூசேனை புலி என்றோ, புலி ஆதரவாளர் என்றோ காரணத்தை வைத்து, அவர் பக்கச்சார்பாகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்ட முடியாது.
அவ்வாறான குற்றச்சாட்டை அரசாங்கம் முன்வைத்தால், அது அரசாங்கத்தையே திருப்பித்தாக்கும். ஏனென்றால், இலங்கையின் நட்பு நாடுகள் கூட இதனை நம்பப் போவதில்லை.
நவநீதம்பிள்ளையை இலங்கை அரசாங்கம் பக்கச்சார்புடையவர் என்று குற்றஞ்சாட்டிய போது கூட, அதனை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே, சையிட் அல் ஹூசேன் விடயத்தில் அரசாங்கம் அவ்வளவு இலகுவாக அவரைப் புலியென்றோ, பக்கசார்புடையவர் என்றோ பிரசாரப்படுத்த முனையாது.
எவ்வாறாயினும், நவநீதம்பிள்ளையின் வழியை பின்பற்றப் போவதாக அவர் அறிவித்திருப்பதும், ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரியிருப்பதும், இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துகளும், அரசாங்கத்தை நிச்சயம் மிரளச் செய்யக் கூடியவை.
இந்தநிலை நீடிக்குமேயானால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன், இலங்கை அரசாங்கம் நீடித்த மோதலுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
அவ்வாறு தொடர்ந்து ஐ.நா.வுடன் முரண்பாட்டை வளர்த்துக் கொள்வது, சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயரைப் பெரிதும் கெடுத்து விடும்.
குறிப்பாக, சிரியா, வடகொரியா, ஈரான், போன்ற நாடுகளுக்கு இணையாக இலங்கையும் கருதப்படுகின்ற நிலை ஏற்பட்டு விடும்.
எனவே, இலங்கை அரசாங்கம், ஐ.நா. வுடன் ஒத்துழைக்கின்ற அல்லது ஒத்துழைப்பது போன்று காட்டிக் கொள்கின்ற அளவுக்கேனும், தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஒன்று உருவாகியுள்ளது.
கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபேயும் கூட, ஐ.நாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், இலங்கையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜப்பான் ஆதரித்திருக்கவில்லை.
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் போர்க்குற்ற விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர், ஐ.நாவின் விசாரணைக்குத் தேவையான தகவல்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதாவது, சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதை ஜப்பான் மட்டுமன்றி, இலங்கைக்குத் துணை நிற்கின்ற பல்வேறு நாடுகளும் கூட விரும்பவில்லை.
ஐ.நாவுடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே வலியுறுத்திய போது, தான், ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இலங்கைக்கு வருமாறு தாம் அழைத்துள்ளதாக தெரிவித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
அதுமட்டுமன்றி, புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சையிட் அல் ஹூசேனுக்கு, இலங்கை அரசாங்கத்தின் சார்பில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸினால், கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், நியூயோர்க்கில் நடக்கவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில், அவரைச் சந்திக்க விருப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், யார் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரை சந்திக்கவுள்ளது என்ற விபரம் வெளியிடவில்லை.
ஏனென்றால், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், இம்மாதம் செல்லவுள்ளார்.
அவர் தான் சையிட் அல் ஹுசேனைச் சந்திக்க விரும்புகிறாரா அல்லது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தான் அவரை சந்திக்க விருப்பம் வெளியிட்டுள்ளாரா என்பது தெளிவாகவில்லை.
எவ்வாறாயினும், புதிய ஆணையாளருடன் பேச்சு நடத்தி, அவரைத் தமது பக்கம் இழுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது மட்டும் உண்மை.
நவநீதம்பிள்ளையைப் போன்று, இவரையும் எடுத்த எடுப்பிலேயே விமர்சித்து ஒதுக்கிவிட முடியாது.
அவ்வாறானதொரு முடிவை அரசாங்கம் எடுப்பது இப்போதைக்கு தற்கொலைக்கு ஒப்பானது.
புதிய ஆணையாளர் வரும் 24ம் திகதி ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள, விசாரணை பற்றிய வாய் மூல அறிக்கையும், அடுத்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கவுள்ள இறுதி அறிக்கையும், அரசாங்கம் ஒருபோதும், எற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆனாலும், அதற்கான முழுப் பழியையும், புதிய ஆணையாளர் மீது அரசாங்கத்தினால் சுமத்தி விட முடியாது.
அதேவேளை, ஐ.நாவுடன் முரண்பட்டுக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டையும் துடைப்பதற்கு, இலங்கை பொறுமை காத்தேயாக வேண்டிய நிலை உள்ளது.
தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு புதிய மனித உரிமை ஆணையாளர் மீது வெறுப்பு கோபம், நம்பிக்கையீனம் என்று எல்லாமே இருந்தாலும், அதை உடனடியாக வெளிப்படுத்த முடியாது.
பொறுமை காத்தேயாக வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது அதற்கான இன்னொரு சோதனை. ஏனென்றால், புதிய ஆணையாளர் சமர்ப்பிக்கும் விசாரணை அறிக்கை, சிங்கள தேசியவாத சக்திகளால், மோசமாக விமர்சிக்கப்படும் வாய்ப்புள்ள சூழலில், அரசாங்கம் மட்டும் மௌனமாக இருக்க முடியாது.
அதேவேளை, கண்டபடி வாயைத் திறந்து மாட்டிக் கொள்ளவும் முடியாது. இந்தவகையில், நவநீதம்பிள்ளை இருந்திருந்தாலே பரவாயில்லை என்று அரசாங்கம் ஒரு கட்டத்தில் சிந்தித்தால் கூட அது ஆச்சரியமானதல்ல.