புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2014


அமெரிக்க ஊடகவியலாளர் கொலையைக் கண்டு அஞ்சபோவதில்லை: ஒபாமா!

Barack Obama
அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார்.
எஸ்டோனியா சென்றுள்ள அதிபர் ஒபாமா, அந்நாட்டின் தலைநகர் டல்லின் நகரில் இருந்து கருத்து வெளியிடுகையில், கொலையாளிகளின் நடவடிக்கை கண்டு அமெரிக்கா அஞ்சப்போவதில்லை என்று கூறினார்.
தன்னை இஸ்லாமிய தேசம் என்று அழைத்துக்கொள்கிற அமைப்பை நிர்மூலமாக்க அமெரிக்கா முடிவாக உள்ளது என்று ஒபாமா கூறினார்.
சொட்லொஃப் கொல்லப்பட்டதைக் காட்டும் வீடியோவில் பிரிட்டிஷ் பணயக்கைதி ஒருவரையும் கொல்லப்போவதாக பயங்கரவாதிகள் எச்சரித்திருக்கும் நிலையில், பிரிட்டனில் நெருக்கடி நிர்வாகத்துக்கு பொறுப்பான உயர்மட்ட கோப்ரா குழு அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவாதித்துள்ளார்.
வேறு சில அமெரிக்கப் பிரஜைகளும்கூட இஸ்லாமிய தேச ஆயுததாரிகளின் பிடியில் இருக்கலாம் என்று நம்பப்படுவதாக அமெரிக்க ராஜங்கத்துறை சார்பகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் ஃபொலி என்ற வேறொரு அமெரிக்க ஊடகவியலாளரும் சென்ற மாதம் இதே பாணியில் இஸ்லாமிய தேசத்தவரால் கொல்லப்பட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஃபொலீ கொல்லப்பட்டதைக் காட்டிய வீடியோவில் 31 வயதான சொட்லொஃப்பும் காண்பிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிரியாவின் வட பகுதியில் வைத்து அவர் கடத்தப்பட்டிருந்தார்.
ஜேம்ஸ் ஃபொலி கொல்லப்பட்ட வீடியோவில் பேசியிருந்தவரைப் போல சொட்லொஃப் கொலை வீடியோவிலும் முகமூடி அணிந்திருந்த நபர் இங்கிலிஷ்காரர் பாணியில் ஆங்கிலம் பேசியிருந்தார்.
இரண்டு வீடியோவில் வருவதுமே ஒரே ஆள்தான் என்று தாங்கள் கருதுவதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஃபிலிப் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அண்மைய வான் தாக்குதல்களால் வட இராக்கில் முன்னேற முடியாமல் போனதை அடுத்து இஸ்லாமிய தேச அமைப்பினர் ஆத்திரத்தில் இந்த அமெரிக்க ஊடகவியலாளர்களைக் கொன்றிருப்பதாகத் தெரிகிறது.
அமெரிக்க விமானங்களை தாக்க வல்லமையில்லாத நிலையில், வேறு விதமான தகவல் யுத்தத்தை நடத்துவதற்காக அவர்கள் இப்படியான குரூரமான காரியத்தில் இறங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ad

ad