புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2014

ஆச்சார்யா தரும் அதிர்ச்சித் தகவல்கள்! : 
கலைஞர் கடிதம்
திமுக தலைவர் கலைஞர் கடிதம்:

’’செல்வி ஜெயலலிதா தரப்பினர் மீது பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்குவிசாரணையின்போது, அரசுத் தரப்பு வழக் கறிஞராகப் பணியாற்றிய பி.வி.ஆச்சார்யா தனது வாழ்க்கைப்பயணத்தை “அனைத்தும் நினைவு களிலிருந்து ” என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் நூல் ஒன்றைஎழுதி இருக்கிறார்.

 இந்த நூலை பெங்களூருவில் 15-11-2014 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி  வகேலா வெளியிட்டிருக்கிறார். நீதிபதி வேணுகோபால் அவர்களும், மத்தியஅரசின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி அவர்களும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்கலந்துகொண்டிருக்கிறார்கள்.  மொத்தம் 33 அத்தியாயங்களும், 336 பக்கங்களும் கொண்ட இந்த ஆங்கில நூலில், இருபத்தைந்தாவது அத்தியாயத்தின் தலைப்பே,என்பது தான்! அதில் 206ஆம் பக்கம் முதல் 220ஆம் பக்கம் வரை, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுவழக்கறிஞராக இருந்த வரும், கர்நாடக மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரலாக) ஐந்துமுறை பணிபுரிந்தவருமான மூத்த வழக்கறிஞர் திரு.பி.வி. ஆச்சார்யா இந்த வழக்கில் ஆஜரானபோது தனக்கு ஏற்பட்டஅனுபவங்களைப் பற்றி அவரே நேரடியாகச் சொல்வதைப்போல எழுதியிருக்கிறார். இந்த நூலில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி அவர் எழுதியுள்ள சில முக்கியமான குறிப்புகளை மட்டும் இங்கே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.


ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை சென்னையில் தொடங்கியது. அதில் அரசுத்தரப்பில் 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2000க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. அரசுத் தரப்புவிசாரணை முடிவதற்கு முன்னரே, குற்றஞ்சாட்டப் பட்ட செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றார்.

அதனையடுத்து ஜெயலலிதா அரசு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் வாதாடப் புதிய வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்தது. அதற்குப் பிறகு ஏற்கனவே சாட்சியம் அளித்த 76 சாட்சிகள் திரும்பவும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்களுடைய மறு சாட்சியத்தில் அவர்கள் முன்பு சாட்சியம் அளித்தபோது சொன்னவற்றை மறுத்து, அவை உண்மை அல்ல என்று தெரிவித்தனர். மீண்டும் அழைக்கப்பட்ட இந்த சாட்சிகளை புதியதாக நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவோ, அவர்களைப் பிறழ் சாட்சிகளாக நடத்தவோ முன் வரவில்லை. 

உச்ச நீதிமன்றம் கருத்துரைத்தபடி, சென்னைத் தனி நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட இந்த விசாரணையே கேலிக்கூத்தான விசாரணை (கயசஉந டிக ய வசயைட) ஆகும்.  வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றப் பட்டதற்குப் பிறகு, தனி நீதிமன்றத்தில் 45 சாட்சிகளை மேலும்
விசாரணை செய்ய வேண்டும் என்று நான் விண்ணப்பித்தேன். 45 சாட்சிகளில் 21 சாட்சிகள் மட்டுமே மீண்டும் அழைக்கப்பட்டு விசாரணை செய்யப் பட்டனர். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சாட்சிகளை மீண்டும் அழைப்பதற்கு நீண்டகாலம் ஆனது.

சாதாரணமாக விசாரணை நீதிமன்றத்தின் நடை முறைகளின்படி, அடுத்த கட்டமாக குற்றவியல் நடை முறைச்சட்டம் பிரிவு - 313ன்படி குற்றம் சாட்டப்பட்டோர் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைக்குக் குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும் நேரடியாக நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக ஆணை வழங்கி உள்ளது. எனினும், குற்றம் சாட்டப்பட்டோரை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகிவிட்டது.
 ஜெயலலிதா 16-5-2011 அன்று முதலமைச்சராகப் பதவி ஏற்றதற்குப் பிறகு, தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை என்னிடமும், அரசுத் தரப்பு வழக்கு குறித்தும் தன்னுடைய அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றிக்கொண்டது. அந்தத்துறை, குற்றவியல் நடை முறைச் சட்டம் 173(8)-பிரிவின்படி வழக்கில் தொடர்ந்து மேலும் புலன்விசாரணை செய்யவும், உயர் நீதிமன்றத்தில் வாதாடுவதற் கெனத் தனியே வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ளவும் முடிவு செய்தது. இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்தும் எனக்கும் தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறைக்கும்
இடையே கடும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. 

வழக்கில் தொடர்ந்து புலன் விசாரணை செய்வதற்கு சட்டத்தின் அடிப்படையில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் காரணமாக, அரசுத் தரப்பு தனி
வழக்கறிஞரை மீறி, தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறைக் கெனத் தனியே வழக்கறிஞர்
ஒருவரை நியமனம் செய்து கொள்ள முடியவில்லை. எனக்கும் தமிழக இலஞ்ச ஒழிப்புத் துறைக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக் கின்றன. 

விசாரணைக்குப் பிறகு உயர் நீதிமன்றம், தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை தொடர் விசாரணை மேற்கொள்வது குறித்தும், தனி வழக்கறிஞரை நியமித்துக் கொள்வது குறித்தும் நான் மேற்கொண்ட நிலைப்பாடே சரியானது என்று தீர்ப்பளித்தது. மேலும், அரசின் தனி வழக்கறிஞரே இலஞ்ச ஒழிப்புத்துறைக்காக வாதாட முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
 கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் நான் ஆஜரானேன். 30-1-2012 அன்று உச்சநீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டதற்குப் பின்னர், இலஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு அனுமதி மனுக்களைத் தள்ளுபடி செய்தும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தும் ஆணையிட்டது.
 குற்றம் சாட்டப்பட்டோர் அனைவரும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு - 313ன்படி, அவர்களுடைய வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் பொருட்டு நீதிமன்றத் தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும்; நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து தனக்கு விதிவிலக்கு அளித்திட வேண்டும் என்றும், தன்னுடைய எழுத்து வடிவிலான வாக்கு மூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது காணொலிக் காட்சி வாயிலாக தன்னுடைய வாக்கு மூலத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும்; செல்வி ஜெயலலிதா சார்பில், விண்ணப்பம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை யில் தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமலேயே வினாக்களுக்கு பதில்களை அளித்திட செல்வி ஜெயலலி தாவுக்கு சென்னை தனிநீதிமன்ற நீதிபதி முன்பு அனுமதி அளித்ததே, தற்போது விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட தற்கான அடிப்படை ஆகும். சென்னை தனி நீதிமன்ற நீதிபதி, செல்வி ஜெயலலிதாவுக்கு வழங்கிய அனுமதி தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் ஆட்சேபணை தெரிவித்தது.

ஜெயலலிதாவின் கோரிக்கை விசாரணை நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப் பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றமும் அவருடைய கோரிக்கையை நிராகரித்து, தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இவ்வளவுக்கும் பிறகுதான் 23-11-2011 அன்று ஜெயலலிதா அவருடைய வாக்குமூலத்தை அளிக்க பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

 அரசுத் தரப்புத் தனி வழக்கறிஞர் என்ற முறையில் நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நியாயமானதும் நேர்மையானதுமான நிலைப்பாட்டினாலும்; புலன் விசார ணையை மேலும் தொடர்வது குறித்தும், தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக உயர் நீதிமன்றத்தில் தனியே வழக்கறிஞர் ஒருவரை நியமனம் செய்து கொள்வது குறித்தும், ம்நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு பெறுவது குறித்தும் நீதிமன்றங்கள் மூலம் சாதகமான உத்தரவுகள் கிடைக்காததாலும்; குற்றம் சாட்டப்பட் டோருக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக செல்வி ஜெயலலிதாவைப்
பின்பற்றுவோர் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர் அவர்கள் இனி தன்னலம் மிக்க ஆதிக்க சக்தியினர் எனக் குறிப்பிடப்படுவர். 

அந்த ஆதிக்க சக்தியினர், குற்றம் சாட்டப் பட்டோருக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கு, அரசுத் தரப்பின்  தனி வழக்கறிஞர் என்ற முறையில் நான்தான் அடிப்படைக் காரணம் என்று கருதி, தனி வழக்கறிஞர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு விடாப்பிடியாக முயற்சி செய்தனர்.
நான் அரசுத் தரப்பு தனி வழக்கறிஞராகவும், அரசின் தலைமை வழக்கறிஞராகவும் பதவிகள் வகித்து வந்த காரணத்தால், ஒரே நபர் இரண்டு பதவிகள் வகிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, அரசுத் தரப்பு தனி வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகிவிட வேண்டுமென்று என்னைக் கட்டாயப் படுத்துவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
 சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், அதன் மூலம் என்னை அரசுத் தரப்பு தனி வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலக்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு, நான் தலைவராக இருந்த பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளையில் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லி, அவற்றின்மீது சி.பி.ஐ. விசாரணை கோரி இரண்டு “ரிட்” மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரண்டு “ரிட்” மனுக் களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “ரிட்” மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, அவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
 உயர் நீதிமன்றத்திலிருந்தோ அல்லது ஆளுநரிட மிருந்தோ அவர்கள் விரும்பியதை அடைவதில் தோற்றுப் போனதற்குப் பிறகு, எண்ணியதை முடிக்க அரசியல் ரீதியான அழுத்தம் தரப்பட்டது. நான் இரண்டு பதவிகளை வகித்து வந்ததால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவி யிலிருந்து விலகும்படி என்னைக் கேட்டுக் கொள்ள மாநில அரசுக்கு பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

 என்மீது தொடர்ந்து இப்படி அழுத்தம் தரப்பட்டு வந்த நிலையில், நான் மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி விடுவதென்று தீர்மானித்து, 8-2-2012 அன்று ராஜினாமா செய்தேன். நான் ராஜினாமா செய்த அன்றே, மாநில அரசு அதனை ஏற்றுக் கொண்டது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து என்னைத் தூக்கியெறிய மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வி கண்டதற்குப் பிறகு, அந்த ஆதிக்க சக்தியினர் என்னை அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விரட்டுவதற்கு தனியார் மகஜர் மூலம் என்மீது புகார் கொடுப்பதென்று முடிவு எடுத்ததாகத் தோன்றுகிறது.
 ஆதிக்க சக்தியின் குழுவைச் சேர்ந்த ஒருவர், நான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பை உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால், எனக்கு எதிராகப் புகார் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று என்னிடம் தெரி வித்தார்.

எனக்கு எதிராகப் புலன் விசாரணை நடத்து வதற்கான நீதிமன்ற ஆணை மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு;சட்டத்துறையில் 56 ஆண்டு களுக்கும் மேலாக அப்பழுக்கற்ற பணி புரிந்து கொண்டிருப்பவன் என்ற எனது புகழுக்குக்களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று எனக்குத் தோன்றியது. அந்த ஆதிக்க சக்தியினர் பிரயோகிக்கும் கடைசி ஆயுதம் இதுவாகத்தான் இருக்கும் என்று எனக்குப்பட்டது. எனவே, நான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி விடுவதென்றும்; என்மீது கொடுக்கப்பட்ட புகாரிலிருந்து நான் நிரபராதி என்று நிரூபிக்கப் படுவதற்கு முன்புவிலகுவதில்லை என்றும் முடிவெடுத்தேன்.

அனைத்துத் தரப்பினரிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டதற்குப் பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றம், தனியார் கொடுத்த புகார் மனுவைத் தள்ளுபடி செய்தும், எனக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை ரத்து செய்தும் ஆணையிட்டது. 

புலன் விசாரணையை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற குற்றம் நிகழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் புகாரில் இல்லை என்றும்; இதுபோன்ற புகாரை ஏற்று விசாரிப்பதற்கு தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
எனக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து கொண்டிருந்தபோது, நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். 

பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்ததற்குப் பிறகும் அந்த ஆதிக்க சக்தியினர் எதைச் சாதிக்க முடியாமல் போனதோ, அதை நான் ராஜினாமா செய்திருந்தால் சாதித்திருப்பார்கள்; அவர்களு டைய ஆசையும் நிறைவேறியிருக்கும். எனினும், எனக்கு எதிரான புகாரிலிருந்து நான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிடும் வரை நான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. புகார் மனுவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பிறகு, 13-8-2012 அன்று நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை
அரசிடம் ஒப்படைத்தேன்.
 கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்னுடைய முடிவை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். ஆனால், அப்போது நானிருந்த மனநிலையில், எக்காரணம் கொண்டும் என்னுடைய ராஜினாமாவை திரும்பப் பெறுவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
 
இறுதியாக 17-1-2013 அன்று என்னுடைய ராஜினாமா மாநில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் எனக்கு இருந்த தொடர்பு முடிவுக்கு வந்தது. என்னுடைய சட்டத்துறை வாழ்க்கையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாமல் போனது இந்த ஒரே ஒரு நிகழ்வில் மட்டும்தான்.
 இந்த வழக்கில் நான் சந்தித்த பல்வேறு தடை களை விளக்கிப் பட்டியலிட்டிருக்கிறேன்.
வாய்தாக்களை எப்படி வெற்றிகரமாகப் பெற முடியும் என்பதற்குத் தேவையான பல்வேறு வகைப்பட்ட புதுமையான அடிப்படைகளை, இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நான் ஆஜரானதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். “ஒத்திவைத்தல் அல்லது வாய்தாச் சட்டம்”என்ற பொருளை மையமாக வைத்து ஒரு நூலையே என்னால் எழுத முடியும். எனினும், குற்றவாளி யாராவது விசாரணையைத் தொடர்ந்து இழுத்தடிக்கும் நோக்கில் என்னுடை நூலைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதால் அவ்வாறு நூல் எழுத நான் விரும்பவில்லை.

உடன்பிறப்பே, இவ்வாறு திரு.பி.வி.ஆச்சார்யா, ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நேர்மையாகவும், கடமை உணர் வோடும் பணி புரிந்ததற்காகவும், ஜெயலலிதா தரப்பினரின் சட்டத்திற்குப் புறம்பான கோரிக்கை களுக்கெல்லாம் வளைந்து கொடுக்காததாலும், அவருக்குக் கிடைத்த பரிசு ‘மன உளைச்சல்’ மட்டும்தான்.

ஆதிக்கசக்திக் கும்பல் தொடர்ந்து கொடுத்த தொல்லைகளாலும், அரசியல் ரீதியான அழுத்தத்தாலும், அவர் இறுதியில் ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நடந்த வினோத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. 

ஜெயலலிதா தரப்பினர் மீது நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, “இது குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்தி வைப்பு நீதிமன்றமா” என்று பெங்களூரு தனி நீதிபதி கேள்வி எழுப்பும் அளவுக்கு வாய்தாவுக்கு மேல் வாய்தாக்கள் கோரப்பட்டதை நீதிமன்றத் துறை சந்தித்தது. பல முறை ஏதாவது ஒரு சாக்கில், சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் வழக்கு கொண்டு செல்லப்பட்டு - ஒவ்வொரு முறையும் குற்றஞ்சாட்டப்பட்டோர் நீதிமன்றங்களின் கண்டனங் களுக்குத் தொடர்ந்து ஆளாயினர்.

இறுதிக்கட்டத்திலே கூட, தீர்ப்பு வழங்கப்படும் நிலையில், தீர்ப்பு நாளையும், நீதிமன்ற வளாகத்தையும் மாற்ற வேண்டுமென்றுகோரி, அது ஏற்கப்பட்டதற்குப் பின் உச்ச நீதிமன்றம் சென்று, வேறு மாநிலத்திலே தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கோரி அதுவும் தள்ளுபடி செய்யப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தேறியது.

“குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் ஆஜராகாமல் இருப்பதை வைத்தே, தீர்ப்பு வழங்கி விடுவேன்” என்று தனி நீதிபதி பச்சாப்புரே கடும் எச்சரிக்கைவிடும் அளவுக்கு நிலைமை முற்றிய தோடு, “நான் தனியாகக் கடந்த ஆறு மாதங்களாக நீதி மன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதைப்போல உணருகிறேன்” என்று அவர் தன்னுடைய மன வேதனையை வெளியிடும் அளவுக்கு நிகழ்வுகள் உருவாக்கப்பட்டன.

இப்படி தனி நீதிமன்ற நீதிபதிகளையும், பி.வி.ஆச்சார்யா போன்றவர்களையும் மன வேதனைக் கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியவர்கள்தான், இன்றைக்கு உத்தமர்கள் போல வேடமணிந்து கொண்டு உலகத்தை ஏமாற்ற எத்தனிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெகுளிகள் தமிழ் மக்கள் என்ற எண்ணத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?’’

ad

ad