புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 நவ., 2014

பிரபாகரன் ஒரு வரலாறு 
''மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்துக்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல... எனது தேச விடுதலையின் ஆன்மிக அறைகூவலாகவே மாவீரர்களது மரணங்கள் திகழ்கின்றன.
சத்தியத்துக்காக சாகத் துணிந்துவிட்டால், ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும். எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது லட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின், அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்கு உண்டு!' இப்படிச் சொன்னவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்!
நவம்பர் 26ம் தேதி பிரபாகரனுக்கு 60வது பிறந்தநாள். அதாவது அவருக்கு இது மணிவிழா ஆண்டு. வழக்கமாகவே நவம்பர் மாதக் கடைசி என்பது ஈழத்தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் உணர்ச்சிபூர்வமாகக் கொண்டாடும் நாட்களாக அமையும். நவம்பர் 27ம் தேதி புலிகள் அமைப்பின் முதல் களப் போராளியான கேப்டன் சங்கர் மரணித்த நாள். அதற்கு முந்தைய நாள் நவம்பர் 26 பிரபாகரன் பிறந்தநாள். எனவே, 25,26,27 ஆகிய மூன்று நாட்களையும் மாவீரர் தினங்களாக விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டாடும். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரன், நவம்பர் 27ம் தேதிதான் வானொலியில் பேசுவார். அதற்காக உலகம் முழுவதும் தமிழர்கள் அந்த நாளுக்காகக் காத்திருப்பார்கள். 2009ம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு, புலிகளின் வானொலி செயல்படவில்லை. அதனால் மாவீரர் தின உரைகளும் இடம்பெறவில்லை.
'பிரபாகரன் போரில் கொல்லப்பட்டார்’ என்று இலங்கை அரசாங்கமும், 'இல்லை, அவர் உயிர் வாழ்கிறார்’ என்று ஈழ ஆதரவாளர்களும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. 1954ம் ஆண்டு வேலுப்பிள்ளைபார்வதி தம்பதியருக்கு வல்வெட்டித் துறையில் பிறந்தவர் பிரபாகரன். அவருக்கு இது 60வது பிறந்த நாள். மணிவிழா பிறந்தநாளாக அதனைக் கொண்டாடத் தயாராகி வருகிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.
''வானவெளியில் வாணவேடிக்கைகள் நடக்கட்டும்... பட்டாசு வெடிகள் முழங்கட்டும்; சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படட்டும்; ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கின்றவர்கள் பூசை நடத்தட்டும். பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்தாலே மானத் தமிழனின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாயுமல்லவா? பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் தமிழர்கள் எழுப்பும் வாழ்த்து முழக்கம் விண்ணை முட்டட்டும். சுதந்திரத் தமிழ் ஈழ விடியலுக்குக் கட்டியம் கூறும் விதத்தில் தாய்த் தமிழகத்திலும், உலகம் எங்கிலும் தமிழர்கள் தமிழ்க்குலத் தலைவனின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள்' என்று பகீரங்கமாகவே அழைப்பு விடுக்கிறார் வைகோ.
'காலம் தந்த தலைவன் மேதகு பிரபாகரன் 60’ என்ற தலைப்பில் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் 26, 27 ஆகிய இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார் பழ.நெடுமாறன். ஒருவார கால நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. இன்னும் பல தமிழர் இயக்கங்கள் விழாக்களைத் திட்டமிட்டு வருகின்றன. ஈழத்தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளார்கள். அவர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும் கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிறது. இப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரே கேள்வி... பிரபாகரன் என்ன ஆனார்?
2009ம் ஆண்டு மே மாதம் அது. இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடலோரத்தில் உள்ள வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி. சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதிகட்டப் போர் உச்சத்தில் இருந்தது. அந்தப் போரில் விடுதலைப்புலிகள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்று இலங்கை இராணுவம் அறிவித்தது.
அத்துடன் அவர்கள் பிணமாக இருக்கும் படங்களையும் வெளியிட்டனர். அந்த நேரத்தில் பிரபாகரனைப் பற்றி மட்டும் எந்தத் தகவலும் வெளிவரவில்லை. மறுநாள், பிரபாகரன், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடல் புலிகள் தலைவர் சூசை ஆகியோரையும் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவிக்க... உலகத் தமிழர்கள் அனைவரும் செய்வதறியாது கலங்கி நின்றனர். பிரபாகரனின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு வீடியோவையும், புகைப்படங்களையும் ராணுவம் வெளியிட்டது. அந்த வீடியோவிலும் புகைப்படத்திலும் இருந்தவரின் உடல் அமைப்பும், பிரபாகரனின் உடல் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தன. ஆனால், பல்வேறு தமிழ் அமைப்புகள் அது பிரபாகரன் இல்லை என்று மறுத்தன. ''போர்க்களத்தில் இருந்த ஒருவர் முகத்தை சுத்தமாக சேவ் செய்து இருக்க முடியுமா? அவரது சீருடையில் இருக்கும் படமும் உள்ளாடை மட்டும் அணிந்த படமும் உண்மையானதாக இல்லை'' என்றும் அவர்கள் சந்தேகங்களைக் கிளப்பினார்கள்.
அன்றைய காங்கிரஸ் அரசு பிரபாகரனின் போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்டு விண்ணப்பம் செய்தது. ஆனால் அதனை இலங்கை அரசு தரவில்லை. 'பிரபாகரனை உடனடியாக எரித்து அவரது சாம்பலைக் கடலில் கலந்துவிட்டோம்’ என்று சொன்னார்கள்.
ஐந்து ஆண்டுகள் ஆகியும் பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதுவரை இலங்கை அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்கவில்லை. கொல்லப்பட்டது பிரபாகரன் என்று பிரகடனம் செய்யும் ராஜபக்‌ஷே அரசு, ஏன் இதுவரை அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கொடுக்கவில்லை என்று கேட்கும் யாருக்கும் எந்தப் பதிலும் இல்லை.
'தலைவர் இறந்தால்தானே அவரது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கொடுக்க முடியும். அவர் இறக்கவில்லை... இருக்கிறார்!’ என்று பதிலடி கொடுக்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். ''பிரபாகரனின் அப்பா, அம்மா ஆகிய இருவரும் முகாமில்தான் இருந்தார்கள். அவர்களை வைத்து பிரபாகரனின் உடலை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்'' என்று சொன்னதற்கும் இலங்கையிடம் இருந்து பதில் இல்லை.
இந்தியாவில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தடையை நீட்டித்துக் கொண்டே இருப்பார்கள். காங்கிரஸ் ஆட்சி முடியும் போது, ஐந்து ஆண்டுக்கு தடை செய்துவிட்டார்கள். இந்தத் தடைக்கான காரணங்களில் ஒன்றாக, 'விடுதலைப்புலிகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தமிழீழத்தையும் தமிழகத்தையும் சேர்த்து ஒரே நாடாக ஆக்குவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வந்தார்கள்’ என்று காரணம் சொல்லப்படுகிறது.
2009ல் அழிக்கப்பட்ட இயக்கத்துக்கு 2018 வரைக்கும் தடைவிதிக்கக் காரணமே பிரபாகரன், பொட்டு அம்மான் பற்றிய சந்தேகங்கள்தான் என்றும் சொல்லப்படுகிறது. 'விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னும் செயல்பாட்டில் இருக்கிறது’ என்று ராஜபக்‌ஷே சமீபத்தில் விடுத்த அறிவிப்பும் இதனை வைத்துத்தான். இறுதிக்கட்ட போர் முடிவில் கைது செய்யப்பட்ட முக்கியப் போராளிகளை இன்னமும் விசாரணையே இல்லாமல் இலங்கை அரசு சிறையில் வைத்துள்ளதற்குக் காரணமாகவும் இது சொல்லப்படுகிறது.
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சாவூரில் பழ.நெடுமாறன் முயற்சியால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைத்தனர். இந்த நினைவு முற்றத்தில் போரில் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களைப் பற்றிய குறிப்புகளும் இங்கே உள்ளது. அதில் பிரபாகரன் படம் வைக்கப்படவில்லை. ''பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் கொல்லப்பட்டார் என்பதை ஆதாரத்துடன் சொல்லுங்கள். அதன் பிறகு நான் என் பதிலைச் சொல்வேன்'' என்று நெடுமாறனும் சொல்லி வருகிறார்.
''பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எப்படிச் சொல்லி வருகிறீர்கள்?'' என்று மத்திய உளவுத் துறை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து நெடுமாறனைக் கேட்டுவிட்டுச் செல்கிறார்கள். ''இது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது'' என்று அவரும் அவர்களுக்குப் பதில் அளித்து வருகிறார்.
இப்படி இலங்கை அரசு, மத்திய அரசு, புலம்பெயர் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் அனைவருக்கும் இன்னும் விலகாத மர்மமாகவே இருக்கிறது. பிரபாகரன் தனது வழிகாட்டியாகச் சொன்னது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை. 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி. எல்லோருக்கும் பிறந்தநாள் என்று ஒன்று வந்தால், நிச்சயம் இறந்தநாளும் என்றாவது ஒருநாள் வரும். ஆனால், இறந்தநாள் என்பது மர்ம நாளாகவே இருப்பது நேதாஜிக்கு அடுத்து பிரபாகரனுக்குத்தான்!
அறுபதாவது அகவையில் பிரபாகரன்! பிறந்தநாள் கொண்டாடும் உலகத் தமிழர்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளில் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இன்று அறுபதாவது பிறந்ததினம்.
தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் கேக் வெட்டி அமோகமாக கொண்டாடுகின்றனர்.
மேலும் தலைவரின் அறுபதாவது பிறந்தநாளுக்கான புதிய கவிதைகளையும், புதிய பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszBRaKYesz.html#sthash.v7aHEUug.dpuf

ad

ad