புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2014



என்னை யாரும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது!– மட்டக்களப்பில் இயக்குனர் பாரதிராஜா


நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன்.
ஆனால் அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை ஒரு விசமாக உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார். 
நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற கரைஞர்களைப் பாராட்டும் நிகழ்வில் பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இயக்குனர் பி.பாரதிராஜா மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது
நான் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் நண்பர் கோபாலகிருஸ்ணனின் அறக்கட்டளை சார்பாக அவரின் வேண்டுதலின் நிமித்தம் கலைஞர்களைச் சந்தித்து பாராட்டுவதற்காக இலங்கை வந்தேன்.
இந்த வகையில் கடந்த சனிக்கிழமை யாழ்பாணத்தில் கலைஞர்களைச் சந்தித்தோம். அந்த நேரத்தில் நான் அங்கு தங்கி இருந்த போது இந்திய தாதரகத்தில் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் இலங்கை அமைச்சர் ஒருவர் என்னைச் சந்திக்க வர இருப்பதாகச் சொன்னார்கள். அப்போது நான் எண்ணினேன் அமைச்சர்களை நாம் தான் போய் சந்திக்க வேண்டும், ஆனால் அமைச்சரே என்னைச் சந்திக்க வருகிறாரா என நினைத்தேன்.
அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னை வந்து சந்தித்தார். மீனவர் பிரச்சினை பற்றிப் பேச முற்பட்டார். நான் அப்போது அவரிடம் சொன்னேன், அரசியல் பேசுவதற்கு நான் இங்கு வரவில்லை, நான் இங்கு வந்ததன் நோக்கம் கலைஞர்களைச் சந்திப்பதற்காகத்தானே ஒழிய அரசியல் பேசுவதற்கல்ல என சொன்னேன்.
அதன்போது அவருடன் வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அந்த புகைப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு பாரதிராஜா இந்த அமைச்சரைச் சந்தித்தார், இவர் அரசின் கைக்கூலியாக வந்திருக்கிறாரோ என்ற ஒரு அபச்சாரமான, கேவலமான ஒரு விடயத்தை பாரதிராஜாவின் மேல் புள்ளியிட்டு அதை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதை நான் இந்த இடத்தில் சொல்லவில்லை என்றால் நான் நாகரீகமற்றவனாகி விடுவேன்.
நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன். ஆனால் அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை ஒரு விடயமாக ஒரு விசமாக உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள்.
 இந்த உண்மைக்குப் புறம்பான விடயத்தை பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும் என நினைத்தேன்.
ஆனாலும் முதல் தடவையாக இங்கு சொல்கின்றேன். நான் இங்கு வந்தது என் நண்பன் கோபாலகிருஸ்ணனின் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் கலைவிழாவில் கரைஞர்களைக் கௌரவப்படுத்துவதற்காக வந்தேனே தவிர வேறு எதற்காகவும் வரவில்லை என்னை யாராலும் கைக்கூலி என்று சொல்லிவிட முடியாது.
முப்பது நாற்பது ஆண்டுகளாக மூன்று நான்கு முதலமைச்சர்களைப் பார்த்து விட்டேன், தமிழ் நாட்டில் நான் அரசியலில் வந்திருந்தால் மிகப்பெரிய அதிகாரத்தில் நான் சென்றிருப்பேன். ஆனால் நான் அதை விரும்பவில்லை, ஆனால் நான் ஒரு நல்ல கலைஞனாக வாழ்ந்து சாக வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
உலகில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரினதும் பூர்வீகம் ஒரே இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகின்றது. இந்த தமிழர்களுக்கு துயரம் வரும்போது இந்த பாரதிராஜா குரல் கொடுப்பான். ஆனால் நான் ஒரு அரசியல்வாதியாக இல்லை. இந்த வகையில் ஈழத்தமிழர்களும் எமது தொப்புள் கொடி உறவுகளே, அவர்களுக்கு நான் ஒரு போதும் தீங்கு செய்யமாட்டேன் என அவர் மேலும் அங்கு தெரிவித்தார்.
அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் கதிரவன் கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு, கிரான்குளம் சீ மூன் காடன் விடுதியில் நடைபெற்ற இந்த கலைஞர்களைப் பாராட்டும் நிகழ்வில் “கிராமியக் கலைஞானி” என்ற பட்டம் மட்டக்களப்பு கலைஞர்களால் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ P.பாரதிராஜாவுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பைச் சேர்ந்த 30 கலைஞர்கள் இயக்குனர் பாரதிராஜாவினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

ad

ad