தற்போது வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். இதுதான் உண்மை: தம்பிதுரை பேச்சு
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர்கள் வேணுகோபால், குமார் ஆகியோர், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தப் பின்னரே தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதேகோரிக்கையை வலியுறுத்திப் பேசிய அதிமுக மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன், பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மாநில அரசு மட்டும் நிவாரணம் வழங்குகிறது. ஆனால் மீனவர்கள் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டும் மத்திய அரசு எந்த உதவிகளையும் வழங்குவதில்லை. இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்து வருகின்றன. அவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, இலங்கையில் நடக்க உள்ள அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டே, தமிழக மீனவர்களை விடுவிப்பதும், அங்குள்ள தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் ராஜபக்சே எடுத்துள்ளார்.
கச்சத்தீவு பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தை விட நாடாளுமன்றம் உயர்ந்தது. இந்த பிரச்சனை குறித்து பேச உரிமை உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்று கூறி பதிலளிப்பதில் இருந்து தப்பிக்க முடியாது. தற்போது வரை கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். இதுதான் உண்மை என்றார்