யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் தீவிரம். யாழ் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோயின்
பரம்பல் தீவிரமடைந்துள்ளது.
கடந்த வருடத்தில் (2014) யாழ். மாவட்டத்தில் 1265 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் டெங்கு நோயினால் உயிர் இழந்துள்ளார். யாழ்ப்பாணம் , நல்லூர் ,கோப்பாய் , உடுவில் , சண்டிலிப்பாய் , சாவகச்சேரி , கரவெட்டி , பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் நவம்பர்,டிசம்பர் மாதங்களில் கூடுதலான நோயாளர்கள் இனம்
காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் , நல்லூர் , கோப்பாய், உடுவில்,சண்டிலிப்பாய் ஆகிய பிரிவுகளில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் நாம் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தும் நோக்குடன் இவ்வாரம் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது