பிரித்தானியா சௌத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து ஹோ ஒசாகா என்ற சரக்குக் கப்பல் கடந்த சனிக்கிழமை மாலை தனது பயணத்தை ஆரம்பித்தது. ஐசில் தீவு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தரைத்தட்டி நின்றது. இதையடுத்து சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரே பக்கமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சரக்குக் கப்பலில் 1200க்கும் மேற்பட்ட ஜாகுவார், லேன்ட் ரோவர் உள்ளிட்ட 1400 விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல், ஏராளமான கட்டுமானப் பொருட்களும் உள்ளன. ஜெ.சி.பி. இயந்திரங்கள், கிரைன்கள், லாரி டிரைலர்கள், கற்களை உடைக்கும் கிரசர் இயந்திரங்கள் உள்ளிட்ட 4,600 டன்களுக்கும் அதிகமான இயந்திரங்கள் ஏற்றப்பட்டிருந்தன. 52 டிகிரி வரை கவிழ்ந்து நிற்கும் அந்த கப்பலை நிமிர செய்ய பல நாட்கள் ஆகும் என்று கப்பல் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்துக்குள்ளான கப்பலில் தவித்துக்கொண்டிருந்த 25 பணியாளர்களை கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
கப்பலில் 500 டன்கள் எடையுள்ள எரிபொருள் இருந்ததாகவும், கப்பல் தரைதட்டியதால் மிகவும் சேதம் அடைந்திருக்கலாம் என்றும் கப்பலின் கேப்டன் ஜான் நோபல் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான பளு ஏற்றப்பட்டது விபத்துக்குக் காரணமல்ல என்றும், சரக்குகளை சரியாக அடுக்காததே கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.