புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

ரூ.190க்கு 'அம்மா சிமெண்ட்' விற்பனை தொடங்கியது தமிழக அரசு!

அ ம்மா சிமெண்ட்’ திட்டம் திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கப்பட்டது. ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.190 ஆகும்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பல்வேறு திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தீட்டி செயல்படுத்தியுள்ளார். அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ள புரட்சித் தலைவி அம்மா ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் ‘அம்மா சிமெண்ட்’ என்னும் திட்டத்தினை 26.9.2014 அன்று அறிவித்தார்.

மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ‘அம்மா சிமெண்ட்’ திட்டம் இன்று (5.1.2015) திருச்சி மாவட்டத்தில் துவங்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 5 கிட்டங்கிகளில் இந்த விற்பனை இன்று துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் படிப்படியாக விரிவு செய்யப்பட்டு 10.1.2015-க்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 470 கிட்டங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும்.

‘அம்மா சிமெண்ட்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் கொள்முதல் செய்யப்படும்.

சிமெண்ட் மூட்டைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிட்டங்கிகளில் இருப்பு வைத்து, மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிக பட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய்துறை அலுவலர், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர், பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

வீடுகள் புதுப்பிக்க மற்றும் பழுது பார்க்க 10 முதல் 100 மூட்டைகள் வரை சிமெண்ட் விற்பனை செய்யப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முகவர்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படும்.

இந்த சிமெண்ட் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 220 கிட்டங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 250 கிட்டங்கிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

ஊரக வளர்ச்சித் துறையின் கிட்டங்கிகளின் மூலமாக விற்பனை செய்யப்படும் சிமெண்ட்டை பெற்று வழங்கிட, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல, மண்டல மேலாளர் ஒருங்கிணைப்பு முகவராக செயல்படுவார். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மாவட்டங்களில் செயல்படும் கிட்டங்கிகளின் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாவட்ட விநியோக மற்றும் விற்பனைச் சங்கங்களுக்கு சொந்தமான கடைகளின் மூலமாக அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 400 மூட்டைகள் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு சிமெண்ட் விற்பனை செய்யப்படும். இதனை மாவட்ட ஆட்சித் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுவின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்.

பசுமை வீடுகள் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் வீடுகள் கட்டுவோருக்கும் ‘அம்மா சிமெண்ட்’ திட்டத்தின் கீழ் சிமெண்ட் வழங்கப்படும்.

இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட ‘அம்மா சிமெண்ட்’ திட்டம் மூலம் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறுவர்" என்று கூறப்பட்டுள்ளது.

திருச்சியில் அதவத்தூர், டிவிஎஸ் டோல்கேட், முசிறி, மணச்சநல்லூர் உள்பட 5 இடங்களில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 

ad

ad