இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததற்கு இந்தியாவின் உளவு அமைப்பான றோ அமைப்பின் இரகசிய ஏஜெண்ட் காரணம் என்ற கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு முறை அதிபராக இருந்த ராஜபக்ச, சீனாவின் இரண்டு நீர் மூழ்கி கப்பல்களை இலங்கைக்குள் அனுமதித்ததால் இந்தியா கவலையடைந்ததாகவும். இதன் காரணமாக றோ அமைப்பின் இரகசிய ஏஜெண்ட், இலங்கை எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரள வைத்து ராஜபக்சவை தேற்கடித்ததாகவும், கூறப்படுகிறது.
மேலும் தற்போது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவை அந்த ஏஜெண்ட் சந்தித்தாகவும், அப்போது சிறிசேனவிற்கு எதிராக போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரகை தெரிவித்துள்ளது.
மேலும் விக்ரமசிங்கவை றோ அமைப்பின் ஏஜெண்ட் இரண்டு அல்லது மூன்று முறை சந்தித்து பேசியதாகவும், அந்த ஏஜெண்ட் அதிபர் சந்திரிகாவுடனும் தொடர்பில் இருந்தாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதேநேரம் றோ அமைப்பின் ஏஜெண்டை கடந்த டிசம்பர் மாதமே இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உண்மையான தகவல் கிடைக்கும் வரை தான் யாரையும் சந்தேகப்படவில்லை என்று ராஜபக்ச தெரிவித்துள்ளளார். ஆனால் அவரது குடும்ப வட்டாரத்தில், விசாரித்த போது, ராஜபக்ச தோல்விக்கு வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர்.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டு பயணமாக விரைவில் இந்தியா வருகிறார். அடுத்த மாதம் டெல்லி வரும் அவர் இந்தியத் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.